சம்பிரதாயத்திற்கு நடக்குது.. எடப்பாடி செயல்பாட்டால் அதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்கள் அப்செட்
சென்னை: அதிமுகவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் கடந்த சில நாட்களாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த நேர்காணல் வெறும் சம்பிரதாயத்திற்கு நடப்பது போல இருப்பதாக நேர்காணலில் பங்கேற்றவர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். வெறும் சம்பிரதாயத்திற்காகவே நேர்காணல் நடைபெறுவதாகவும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றது.

விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்
மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு அளித்தவர்களிடம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி நேர்காணல் நடைபெற்று வருகிறது. சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் நேர்காணலில், துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள எழுப்புவதாகவும் சொல்லப்படுகிறது.
உரிய பதவிகள் தேடி வரும்
கட்சியில் எத்தனை ஆண்டுகளாக இருக்கிறீர்கள்?, கட்சி சார்பாக நடந்த எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளீர்கள், மக்களுக்கு என்னென்ன சேவைகள் செய்து இருக்கிறீர்கள், உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தொகுதி மக்களுக்கு என்னென்ன திட்டப்பணிகள் செய்வீர்கள் என்பது போன்று பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார்.
பின்னர், விருப்ப மனு கொடுத்த அனைவரையும் ஒன்றாக அழைத்து, கட்சி யாரை சொல்கிறதோ அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். மேலும் அவர், 'அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். எம்.எல்.ஏ. சீட்டு கிடைக்காதவர்களுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் உரிய பதவிகள் தேடி வரும்.
ஆதங்கத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்
கட்சிக்கு உழைப்பவர்கள் யாரையும் கைவிட மாட்டேன். கட்சிக்கு விசுவாசத்தோடு வேலை செய்யுங்கள் என்று எடப்பாடி அட்வைஸும் செய்து அனுப்புகிறாராம். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் நேர்காணலால் அதிமுக நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்படுள்ளதாம். வெறும் சம்பிரதாயத்திற்காகவே நேர்காணல் நடைபெறுவதாகவும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான குழு, தொகுதி வாரியாக நேர்காணல் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஏழு அல்லது எட்டு தொகுதிகளின் விருப்ப மனுதாரர்களை ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அவர்களிடம் நேர்காணல் நடத்துகிறார். இதனால், எடப்பாடி பழனிசாமியிடம் தனியாக உரையாடி தங்களின் செயல்பாடுகளை எடுத்துரைக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஊக்கமளிக்கும் பேச்சுகள் மட்டுமே
இதனால், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் குறைவாகவே இருப்பதாக கூறியுள்ளனர். அதேபோல, நேர்காணலுக்கு பதிலாக வெறுமனே ஊக்கமளிக்கும் பேச்சுகள் மட்டுமே இருப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்துவது போலவே பெரும்பாலும் பேசுவதாகவும் சொல்லபடுகிறது.
இதனால் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையக்கூடும் என்பது தெரியவருவதாகவும் அதிமுகவினர் கூறினர். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், வாரிய பதவிகள், உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் எடப்பாடி உறுதி அளித்தாராம்.












Click it and Unblock the Notifications