டக்கென நிறுத்திய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ! “கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலயே” கலாய்த்த சபாநாயகர்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேச ஆரம்பித்தபோது, நத்தம் விஸ்வநாதன் உள்ளே வந்துவிட்டதால் அவர் பேச்சை நிறுத்திக் கொண்ஆர். அதைக் கண்ட சபாநாயகர் அப்பாவு, "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல பாருங்க செல்லூர் ராஜூவுக்கு" என கலாய்த்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி பதில் நேரத்தில் நத்தம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் உயர் கல்வித்துறை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். சபாநாயகர் அப்பாவு அவரை பேச அழைத்தபோது அவர் அவையில் இல்லாத நிலையில் அவருக்கு அடுத்தபடியாக செல்லூர் ராஜு கேள்வி எழுப்ப அழைத்தார். செல்லூர் ராஜூ பேச ஆரம்பித்ததுமே, அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் திடீரென சட்டப்பேரவைக்குள் வந்தார். இதையடுத்து, செல்லூர் ராஜூ, "ஐயா.. வந்துட்டாருங்கய்யா" எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனை தனது கோரிக்கையை எழுப்புமாறு கூறினார் சபாநாயகர் அப்பாவு. அதனைத் தொடர்ந்து தனது தொகுதியில் அரசு கல்லூரி அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார் நத்தம் விஸ்வநாதன். அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் இருக்கையில் இல்லாததால் அவருக்கு அடுத்ததாக செல்லூர் ராஜு மைக்கில் பேச இருந்த நிலையில் நத்தம் விஸ்வநாதன் பேரவைக்குள் வந்து கேள்வி கேட்டார். செல்லூர் ராஜூ பேச ஆரம்பித்து நிறுத்தியதைக் கண்ட சபாநாயகர் அப்பாவு, "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல பாருங்க செல்லூர் ராஜூவுக்கு" என கலாய்த்தார்.
இதனையடுத்து சட்டப்பேரவை வினாக்கள் விடைகள் நேரத்தில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், "மதுரை மேற்கு தொகுதியில் ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. மதுரை மாநகரிலே ஒரே ஒரு அரசு கல்லூரி 1962ல் தொடங்கப்பட்டது தான். அதற்குப் பிறகு தொடங்கவில்லை. அதுவும் மகளிர் கல்லூரி மட்டுமே உள்ளது. மற்ற எல்லாம் தனியார் கல்லூரியாகத் தான் உள்ளது.
மாநகராட்சி பகுதியில் எந்தக் கல்லூரியும் இல்லாமல் உள்ளது. என்னுடைய தொகுதியில் 3.5 ஏக்கர் நத்தம் புறம்போக்கு இடம் காலியாக உள்ளது. ஏற்கனவே இந்த கேள்வியை கேட்டேன். அப்போது அமைச்சர் பொன்முடி 10 ஆண்டுகள் நீங்கள் அமைச்சராக இருந்து ஒன்றும் செய்யவில்லை. ஆனால் எங்கள் முதலமைச்சர் நிச்சயமாக செய்வார். கல்லூரி கொடுப்பார் நான் வாங்கி கொடுப்பேன் எனச் சொன்னார். பேரவை தலைவரே.. பார்த்து நிறைவேற்ற சொல்லுங்க... உங்க கையில தான் இருக்கு" எனப் பேசினார்.
அதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "முன்னாள் அமைச்சர் கோரிக்கை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரும் அதை செய்து கொண்டிருக்கிறார். மதுரையை பொறுத்தவரை உறுப்பு கல்லூரிகள் எல்லாம் அரசு கல்லூரிகளாக ஏற்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஏழு உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்தவரை கல்வியிலே மிகச்சிறப்பாக இருப்பது தான். பல்கலைக்கழகமே அங்கு இருக்கிறது. ஆகவே உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று வருங்காலங்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications