மீண்டும் “செருப்பு” பஞ்சாயத்து.. கோபத்தை கொப்பளித்த அண்ணாமலை - பிடிஆர் மீது தரம் தாழ்ந்த விமர்சனம்
சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தன்னுடைய செருப்பு அளவுக்கு கூட தகுதி கிடையாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்து இருக்கிறார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாரதிய ஜனதா கட்சி, மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக பாஜகவினரும் பிடிஆரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும்போது வீரமரணமடைந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செல்தினர்.

செருப்பு வீச்சு
அதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

10 பேர் கைது
இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மாவட்டத் தலைவராக இருந்த சரவணனின் தூண்டுதலின்பேரிலேயே காலணி வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நள்ளிரவே சரவணன் பிடிஆரை சந்தித்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அண்ணாமலை ஆடியோ
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் ஆகியோர் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஆடியோ தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அது போலியானது என சுசீந்திரன் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

அண்ணாமலை விளக்கம்
இந்நிலையில் அந்த ஆடியோ தன்னுடையது தான் என பாஜக அண்ணாமலை ஒப்புக்கொண்டார். "பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது தவறு தான். இது குறித்து நான் மதுரை புறநகர் நிர்வாகி உடன் பேசி இருந்தேன். நான் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ உண்மைதான். அதில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும் சேர்த்தும் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவை முழுவதுமாக வெளியிட வேண்டும்" என கூறினார்.

ட்விட்டர் பதிவு
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை காட்டமாக விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். அதில், "பிடிஆர், உங்கள் பிரச்சனை இதுதான். முன்னோர்களின் இனிஷிலுடன் வாழும் உங்களாலும் உங்கள் கூட்டாளிகளாலும் சுயமான உருவான விவசாயியின் மகனை ஒரு நபராக ஏற்க முடியாது. பெரிய பரம்பரையிலும் வெள்ளிக் கரண்டியிலும் பிறந்ததை தவிர்த்து இந்த ஜென்மத்தில் நீங்கள் பயனுள்ள எதையாவது செய்து இருக்கிறீர்களா?

செருப்புக்கு கூட ஈடில்லை
அரசியலுக்கும் நமது மாநிலத்துக்கும் நீங்கள் சாபக்கேடாக உள்ளீர்கள். பெரிய விமானங்களில் செல்லாத, வங்கிகளை இழுத்து மூடாத, முக்கியமாக சமநிலைகொண்ட அறிவை கொண்டு வாழும் எங்களைபோன்ற மக்கள் உள்ளார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறுதியாக ஒன்றை சொல்கிறேன். என் செருப்புகளின் அளவுக்கு கூட உங்களுக்கு தகுதியில்லை. உங்கள் அளவுக்கு தரக்குறைவாக நான் இறங்க மாட்டேன். எனவே கவலைப்பட வேண்டாம்." என்றார்.












Click it and Unblock the Notifications