சிக்சர் பட்ஜெட்.. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு! 2 லட்சம் மாணவர்கள் பசியாற்றும் அரசு
சென்னை: தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட் அறிவிப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2024 - 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலமாக மேலும் 2 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைவார்கள். இதற்காக ரூ.600 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது." என்றார்.

இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில் "சமூக நீதியை அடிப்படையாகக் திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளன்று மதுரையில் தொடங்கப்பட்டு, பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 30,992 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 15 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளதோடு அவர்களின் ஊட்டச்சத்தும் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றிக் கல்வியறிவு பெற்றிடவும், எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம் என்று அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தினை மேலும் முழுமையாகச் செயல்படுத்திட, தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மேலும் சுமார் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தும் பொருட்டு ஊட்டச்சத்தை உறுதி செய்" என்ற திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, அதன் விளைவாக, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளில், 74 சதவீத குழந்தைகள் இயல்புநிலைக்கு முன்னேறியுள்ளனர். இன்னும், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களாகக் கண்டறியப்படும் 6 மாதத்திற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்படும்.
மேலும், குழந்தைகள் மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்திடும் வகையில், வரும் நிதியாண்டில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் வாடகைக் கட்டடங்களில் இயங்கிவரும் 500 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக வரும் நிதியாண்டில் 3,123 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்." என்று அறிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications