மலரும் புத்தாண்டில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும் - முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ் புத்தாண்டு, விஷு தின வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.
சென்னை: மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மலையாள மொழி பேசும் மக்களின் வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என விஷு தின நல் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளைய தினம் தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கேரளாவில் மலையாள மொழி பேசும் மக்களின் புத்தாண்டு விஷு பிறப்பு கொண்டாடப்படுகிறது. முதல்வர் பழனிச்சாமி, தமிழ் புத்தாண்டு விஷு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
''ஆதிமனிதன் தமிழன் தான்
அவன் மொழிந்ததும் செந்தமிழ்த்தேன்''
என்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கவிதைக்கேற்ப, தொன்மையும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ்மொழியை பேசும் உலகின் மூத்தகுடியான தமிழ்ப் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.
மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
புத்தாண்டு திருநாளாம் ''விஷு'' திருநாளை உற்சாகமாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ''விஷு'' தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எவ்விடத்தில் வாழ்ந்தாலும் தங்கள் பாரம்பரியத்தையும், மரபுகளையும் பேணிப் பாதுகாத்து வாழும் மலையாள மொழி பேசும் மக்கள், புத்தாண்டு திருநாளான ''விஷு'' திருநாளன்று, அதிகாலை கண் விழித்து அரிசி, காய்கனிகள், கண்ணாடி, கொன்றை மலர்கள், தங்க நாணயங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷுக்கனி கண்டு, மலரும் இப்புத்தாண்டு அனைத்து நலன்களையும் வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலர வேண்டும் என்று இறைவனை பக்தியுடன் வழிபட்டு, குடும்பத்தினருடன் அறுசுவை விருந்துண்டு ''விஷு'' தினத்தை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.
இப்புத்தாண்டு, மலையாள மொழி பேசும் மக்களின் வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அவர்களுக்கு எனது இனிய ''விஷு'' திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.