ஜெ. அன்பழகன் மரணம்- முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்; போர் வீரனின் அகால மரணம்- ப. சி.
சென்னை: கொரோனா போர்களத்தில் உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது போர் வீரனின் அகால மரணம் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார் ப. சிதம்பரம்.
Recommended Video
சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வரின் இரங்கல்:

திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜெ. அன்பழகன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டிடிவி தினகரன் இரங்கல்:
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல்:

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் அவர் மறைந்தது நமது வேதனையை அதிகமாக்குகிறது.
கொரோனா ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், மக்கள் நல நிகழ்ச்சிகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பாடத்தை அரசியல் கட்சியினருக்கும் பொது மக்களுக்கும் விட்டுச் சென்றுள்ளார் அன்பழகன். அதன்படி தொடர்ந்து நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்
கொங்கு ஈஸ்வரன்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் வெளியிட்ட இரங்கல்:

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மனதில் பட்டதை எதார்த்தமாகவும், தைரியமாகவும் பேசக்கூடியவர். அவர் பிறந்த தினத்திலேயே மறைந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத வலியை மனதில் உருவாக்கி இருக்கிறது. திமுகவினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சீமான் இரங்கல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுற்றார் எனும் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்

வலக்கரம் இழந்தார் ஸ்டாலின் - வைரமுத்து இரங்கல்
கவிஞர வைரமுத்துவின் இரங்கல்:

ஜெ.அன்பழகன் மறைவில் தன் வலக்கரம்
இழந்தார் தலைவர் ஸ்டாலின்.
செயல் சிங்கத்தை இழந்தது இயக்கம்.
உறுதிப்பொருள் உரைக்கும் உறுப்பினரை
இழந்தது சட்டமன்றம்.
என் நண்பரை இழந்தேன் நான்.
மரணம் கொடிது;
கொரோனா மரணம்
கொடிதினும் கொடிது.
ஆழ்ந்த இரங்கல்
இயக்கத்தார்க்கும்; இல்லத்தார்க்கும்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல்:

ஜெ.அன்பழகன் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
போர் வீரனின் அகால மரணம்- ப. சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட இரங்கல்:

திமுக MLA மற்றும் மாவட்டச் செயலாளர் திரு ஜெ அன்பழகன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இடையறாது தொண்டாற்றிய ஒரு போர் வீரனின் அகால மரணம். அவருடைய குடும்பத்திற்கும் தி மு கழகத்திற்கும் என் அனுதாபங்கள்.
பெருமைக்குரிய மரணம்- தி.வி.க.
திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் வெளியிட்ட இரங்கல்:
திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஜெ.அன்பழகன் இன்று மரணமடைந்துவிட்டார்.கொரானோ தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். கடந்த சில வாரங்களாக கட்சியின் தலைமை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உணவுப் பொருள்களை வழங்குகிற உதவிகளை செய்துவந்தது. "ஒன்றிணைவோம் வா" என்ற பெயரில் செயல்பட்ட அத்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்று செயலாற்றி வந்தார் ஜெ.அன்பழகன். 1995ம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர். மருத்துவர்கள் ஆலோசனையை மீறி பொது தொண்டாற்ற வந்தார் அவர்.
பொதுத்தொண்டின் வழியாக கிடைக்கின்ற மரணம் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய மரணம்தான். இந்த மரணம் அவருக்கும் அவர் சார்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது என்று நிச்சயமாக நாம் சொல்ல முடியும். இவரது தந்தை ஜெயராமன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலூக்கமிக்க தொண்டராகப் பணியாற்றி வந்தவர். தியாகராய நகரில் பழக்கடை நடத்தி வந்தார். 1976ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலையை கொண்டு வந்து திமுகவினரை மிசாவின் கீழ் கைது செய்த போது இவரது தந்தையும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையிலே வாடியவர் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவிலேயே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொரானோவிற்காக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கின்ற ஒரு மக்கள் தொண்டாற்றும் பணியில் ஈடுபட்டு அதன் காரணமாக உயிர் இழந்திருக்கிறார் என்ற பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஜெ.அன்பழகன் அவர்களுக்கும் கிடைத்து இருக்கிறது. ஆனாலும் செயலூக்கமிக்க ஒரு தோழரை திராவிட முன்னேற்றக் கழகம் இழந்து நிற்கிறது.திமுகவினருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.












Click it and Unblock the Notifications