இந்த விஷயம் வெளியே கசியக்கூடாது.. பட்ஜெட் வரை ரகசியம் காக்கணும்.. விஜய் அமைச்சர்களுக்கு உத்தரவு
சென்னை: இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும் தற்போதைக்கு வெளியில் கசியவிடக் கூடாது என்று முதலவர் விஜய் தனது அமைச்சர்களுக்கு மிகவும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கியமான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் நடைபெறும் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதையும் தற்போதைக்கு வெளியில் கசியவிடக் கூடாது என்று முதலவர் விஜய் தனது அமைச்சர்களுக்கு மிகவும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பட்ஜெட் வரும் வரை ரகசியம் காக்க வேண்டும்
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதலவர் விஜய், இன்று விவாதிக்கப்பட்ட மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, தங்களது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து அமைச்சர்களிடம் பேசிய அவர்:
இன்று நாம் எடுத்துள்ள முடிவுகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எந்தவொரு அமைச்சரும் பொதுவெளியிலோ அல்லது ஊடகங்களிலோ இது குறித்து வாய் திறக்கக் கூடாது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் வரவிருக்கும் தமிழக பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதுவரை அனைவரும் ரகசியத்தைக் காக்க வேண்டும்.. என்று அறிவுறுத்தினார்.
தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை: சிஎம் எச்சரிக்கை
இதைத் தொடர்ந்து, தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்களின் கடமைகள் குறித்து முதலமைச்சர் விஜய் மிகவும் ஆவேசமாகவும் கண்டிப்புடனும் பேசினார். சர்ச்சையில் சிக்காதீர்கள்.. சிக்க கூடிய விஷயத்தை செய்யாதீர்கள்.. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். தவறு செய்யும் அமைச்சர்களின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்படும் என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது
எனக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நெருக்கமானவர்கள் அல்லது அந்நியர்கள் என்ற எந்தவிதமான பாகுபாட்டையும் நான் பார்க்க மாட்டேன். யார் தவறு செய்தாலும், அது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அவர்களது அமைச்சர் பதவி பறிக்கப்படும். இதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மக்களின் நம்பிக்கையைப் பெற்று நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். எனவே, இந்த நமது அரசு எந்தவிதமான புகாருக்கும் இடமளிக்காத, வெளிப்படையான மற்றும் முழுமையான ஊழலற்ற நிர்வாகமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை எக்காரணத்தைக் கொண்டும் சிதைத்துவிடக் கூடாது என்று மிகத் தெளிவாகக் கூறினார்.
பள்ளிகளில் 'ரீல்ஸ்' எடுக்கத் தடை
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து மேலும் சில முக்கிய அறிவுறுத்தல்களையும் முதலவர் விஜய் வழங்கியுள்ளார்.
அமைச்சர்கள் யாரும் தங்களது விளம்பரத்திற்காகவோ அல்லது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுவதற்காகவோ அரசுப் பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கக் கூடாது என்று முதலவர் விஜய் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளிகள் என்பது மாணவர்கள் கல்வி கற்கும் புனிதமான இடம் என்றும், அங்கு அமைச்சர்களின் சுய விளம்பர ரீல்ஸ்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர்களின் கவனம் எப்போதும் மக்கள் பணியிலும், தங்களது துறை சார்ந்த பணிகளின் முன்னேற்றத்திலும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நெருங்கி வரும் வேளையில், விஜய்யின் இந்த அதிரடி மற்றும் கண்டிப்பான உத்தரவுகள் அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அமைச்சர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications