ராகுல்காந்தி தகுதிநீக்கம்.. சென்னையில் களமிறங்கிய காங்கிரஸ்.. கார்த்தி சிதம்பரம் தலைமையில் போராட்டம்
சென்னை: ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது ஆகியவற்றை கண்டித்து இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தலைமையில் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையானது.
மோடி பெயர் குறித்து விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துவிட்டதாக கூறி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராகுல் காந்தி மீதான அவதூறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா உத்தரவிட்டார். இருப்பினும் அவர் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி போராட்டம்
இதனையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு மாநிலங்களிலும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.

களமிறங்கும் தமிழ்நாடு காங்கிரஸ்
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் மூலம் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது.

கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தல்
பாஜகவின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துகிற வகையில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் நடத்தும்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் நிர்வாகமும் அறப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

சென்னை கார்த்தி சிதம்பரம்
இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்தி பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆதரவை பெருமளவில் திரட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications