தமிழகத்தில் மின் இணைப்பு பெற புதிய விதிமுறை.. புதிய வீடுகளுக்கு மின் வாரியம் வைத்த செக்
சென்னை: புதிதாக வீடு கட்டுபவர்கள் மின்கசிவு காப்பு சாதனத்தை பொருத்தியிருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மின்சார விபத்துகளை தவிர்க்க இந்த முடிவினை எடுத்துள்ள அதிகாரிகள்,. ஏற்கனவே மின் இணைப்பு உள்ள வீடுகளிலும் கண்டிப்பாக ஆர்.சி.டி ஸ்விட்ச் பொறுத்துவது நல்லது என்று வலியுறுத்தி உள்ளனர்.
நாமக்கல்லைச் சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் சரணிதா சென்னை அயனாரவரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் மடிக்கணினிக்கு 'சார்ஜ்' போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதேபோல் விழுப்புரத்தில் மின்சார மோட்டார் சுவிட்சை போட்டபோது காசியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதேபோல் ஹீட்டர் போடும் சிலர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவங்கள முன்பு நடந்துள்ளது. ஈரக்கையில் மிக்ஸி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், அயன் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது.

சில நேரங்களில் வயர்களில் மின்சாரம் லீக் ஆகி, அது எர்த்தில் பாய்ந்துவிடும். அப்படி எர்த்தில் மின்சாரம் பாயும் போது, அதனை தொடுவோர் இறந்து போகிறார்கள். உதாரணமாக துணி காயப்போடும் போது மின் வயர்களின் எர்த் பாஸ் ஆகி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுவரை ஏற்பட்ட மின் விபத்துக்கள் எல்லாம் மேலே சொன்ன ஏதோ ஒரு காரணமாகவே இருக்கும்.
இதனை தடுக்க முடியுமா என்றால், நிச்சயம் மின் விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். இதற்கு வீடுகளில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்காக, 'ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்' (ஆர்.சி.டி.) என்பது அனைத்து மின்சார இணைப்புகளிலும் கட்டாயம் பொருத்தப்பட வேண்டிய ஒரு உயிர்காக்கும் சாதனம் ஆகும். இதனை புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் ஏற்கனவே மின்சார இணைப்பு பெற்றவர்களும் கண்டிப்பாக தங்கள் வீடுகளில் பொருத்த வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில் 'வீடுகளில் சமீபகாலமாக மின்சார கசிவு காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதனை தவிர்ப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வீடுகளில் மின்சார கசிவை கண்டுபிடித்து உடனடியாக 'பீஸ்' போக வைக்கும் கருவியான 'ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்' (ஆர்.சி.டி.) சாதனத்தை பொருத்த ஏற்கனேவப அறிவுறுத்தி இருந்தது.
தற்போது புதிதாக மின்சார இணைப்பு கேட்கும் மின்சார நுகர்வோர்கள் கண்டிப்பாக வீடுகளில் மின்சார கசிவு காப்பு சாதனத்தை பொருத்த வேண்டும். இதுகுறித்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல லட்சம் செலவு செய்து கட்டும் பொதுமக்கள் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரை செலவு செய்து மின் கசிவு காப்பு சாதனத்தை பொருத்தி வீடுகளில் மின்சார விபத்துகளை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களும் இந்த காப்பு சாதனத்தை வாங்கி தங்கள் வீடுகளில் பொருத்த வேண்டும்" என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications