காங்கிரஸ் மட்டும்.. தவெக விஜயுடன் கூட்டணி வைத்தால்.. அது பெரிய சிக்கலில் முடியும்! ஏன் தெரியுமா?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அது அரசியல் ரீதியாக அந்த கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளன. தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அக்கட்சியின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய உள்ளதால், அக்கட்சியின் பலம் 107 ஆகக் குறைய உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 என்ற மாய இலக்கை அடைய இன்னும் 11 இடங்கள் தேவைப்படும் சூழலில், 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் தலா 4 இடங்களை வைத்துள்ள பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் 'கிங் மேக்கர்களாக' உருவெடுத்துள்ளன.

இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சி தனது நீண்டகால கூட்டாளியான திமுக-வை கழற்றிவிட்டு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒரு முடிவு தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில், குறிப்பாக உத்தரப் பிரதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
மோடியின் பிரச்சாரமும், சமாஜ்வாதிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையும்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தைக் கையில் எடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் பல தசாப்தங்களாகத் தங்களுக்குத் தோள் கொடுத்த ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி எப்படி நட்டாற்றில் விட்டது என்பதை ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் மோடி சுட்டிக்காட்ட வாய்ப்புள்ளது.
"தமிழகத்தில் ஸ்டாலினையே ஏமாற்றிய காங்கிரஸ், நாளை உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவையும் இதேபோல் நட்டாற்றில் விடாது என்பதற்கு என்ன நிச்சயம்?" என்ற கேள்வியை மோடி முன்வைப்பார். அகிலேஷை கழற்றிவிட்டு காங்கிரஸ் எப்போது வேண்டுமானாலும் மாயாவதியின் பிஎஸ்பி-யுடன் கைகோர்க்கலாம் என்ற அச்சத்தை சமாஜ்வாதி ஆதரவாளர்களிடையே விதைப்பதே பாஜகவின் வியூகமாக இருக்கும். இதன் மூலம் ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் 'நம்பிக்கைத் துரோகிகள்' (Backstabbers) என்று முத்திரை குத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
ஆறு மாதங்களில் கவிழுமா காங்கிரஸின் கனவு?
மறுபுறம், தவெக- காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலம் நீடிக்குமா என்பதும் கேள்விக்குறியே. தற்போது அதிமுக-வில் இருக்கும் பல எம்.எல்.ஏ-க்கள் வரும் காலங்களில் விஜய்யின் தவெக-வில் இணையப் போவதாகப் பரவலான பேச்சு நிலவுகிறது. அவ்வாறு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்தால், சட்டப்பேரவையில் விஜய்யின் பலம் தானாகவே உயரும். அந்த நிலையில், விஜய்க்கு காங்கிரஸின் ஆதரவு தேவைப்படாது.
கூட்டணி அமைந்த ஆறே மாதங்களில் விஜய் காங்கிரஸை வெளியேற்றினால், அக்கட்சியின் நிலைமை பரிதாபத்திற்குரியதாகிவிடும். திமுக-வின் கதவுகளும் மூடப்பட்டு, தவெக-வாலும் கைவிடப்பட்ட நிலையில், காங்கிரஸ் தமிழகத்தில் அனாதையாக நிற்கும் சூழல் உருவாகலாம். இது தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் காங்கிரஸின் நம்பகத்தன்மையைச் சிதைத்துவிடும்.
யாருக்கும் கிடைக்காத முழு அதிகாரம்
திமுக 73 இடங்களையும், அதிமுக 53 இடங்களையும் பெற்றுள்ள இந்தத் தீர்ப்பு, வாக்காளர்கள் எந்த ஒரு தனி நபருக்கும் அல்லது கட்சிக்கும் முழுமையான அதிகாரத்தை வழங்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 112 என்ற பலத்துடன் (தவெக 107 + காங்கிரஸ் 5) விஜய்க்கு இன்னும் 6 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்தச் சிக்கலான சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார்.
காங்கிரஸ் எடுக்கும் இந்த ஒரு தற்காலிக முடிவு, அக்கட்சியின் தேசிய அளவிலான பிம்பத்தை சிதைப்பதோடு, இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற மாநிலக் கட்சிகளிடையே ஒருவித அவிசுவாசத்தை உருவாக்கும் ஆபத்தும் உள்ளது. தமிழகத்தின் இந்த அரசியல் சதுரங்க ஆட்டம், டெல்லி வரை எதிரொலிப்பது உறுதி.












Click it and Unblock the Notifications