பரபர வேகத்தில் ரெடியாகும் தமிழக அரசு.. 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்க உத்தரவு
சென்னை: 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அது போல் முகக் கவசம், பிபிஇ கிட்களையும் போதுமான அளவிற்கு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்கி இருுப்பு வைத்திருக்க வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கொரோனா வார்டுகளில் படுக்கைகளை அதிகரிக்கவும் வேண்டும். கொரோனா தடுப்பூசி மையங்கள் முழுநேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் ஆகிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சீனா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பிஎப் 7 எனும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

பிஎப் 7
இந்தியாவிலும் சிலருக்கு புதிய வேரியண்ட் பிஎப் 7 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பொது இடங்களில் முகக் கவசம் அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம்
இந்திய அளவிலும் விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் புதிய வேரியண்ட்டால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications