நாளை ஐப்பசி மாத முதல் சுபமுகூர்த்த தினம்! சார் பதிவாளர் அலுவகங்களில் கூடுதல் டோக்கன்! அரசு அறிவிப்பு
சென்னை: ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான நாளை, சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆவணங்கள் பதிவு செய்ய அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதில் நாளை ஒரு நாள் மட்டும் 150 டோக்கன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து வாங்குவோர், சொத்து விற்போர், ஆவண எழுத்தர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு;
கூடுதல் டோக்கன்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
சுபமுகூர்த்த தினம்: வரவிருக்கும் ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 18.10.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 18.10.2023 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பதிவுத்துறைக்கு உத்தரவு: அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து விற்போரை பற்றி கவலையில்லை, வாங்குவோர் நாள் நட்சத்திரம் பார்த்து மிகுந்த செண்டிமெண்டோடு தான் வாங்குவார்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications