திருப்பி அடித்த ஸ்டாலின்.. தமிழ்நாட்டில் சிபிஐக்கு அனுமதி ரத்து! இது மம்தா, பினராயி, ராவ் ரூட்
சென்னை: மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை திரும்பப் பெற்று இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, (Delhi Special Police Establishment Act. 1946 (Central Act XXV of 1946)}-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டு இருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டு உள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக. தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய விசாரணை நிறுவனங்களான சிபிஐ, என்.ஐ.ஏ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்றவற்றை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடங்கி தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜி வரை பலரை மத்திய புலனாய்வு நிறுவனங்கள் விசாரணைக்கு அழைப்பது, கைது செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இதுபோல் கைதாகி உள்ளார்.
டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் சகோதரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினரும் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகருமான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
அதேபோல் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக்கும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், நேற்று செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

அதேபோல் தலைமை செயலகத்திலும் 13 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்த நிலையில் நேற்று இரவு சோதனை முடிந்த பிறகு அவரை கைது செய்தது. இது தொடர்பாக நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும்.
அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது." என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications