ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டதா? தமிழக அரசு பரபர விளக்கம்!
சென்னை: தாம்பரம் அருகே ஆவின் பால் பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் இடைவிடாது பெய்த அதிகனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்புகுள்ளானது. மிக்ஜாம் புயல் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப் போட்டது. உணவு, குடிநீர், பால், மின்சாரம், தகவல் தொடர்பின்றி மிகவும் அவதிக்குள்ளாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் புயல் சீரமைப்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ள பாதிப்பால் மக்கள் பால் பாக்கெட் கிடைக்காமல் அவுதியுற்ற நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக உள்ள கால்வாயில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. மக்களிடம் பாலை விநியோகிக்காமல் வீணடித்ததாக ஆவின் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
"தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் சில்லறை விற்பனையாளர்கள், பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் 04.12.2023 தேதியன்று மிக்ஜாம் புயல் காரணமாக அதிக அளவில் மழை பொழிந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது.

எனவே தாம்பரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. எனவே சில இடங்களில் 04.12.2023 தேதியன்று பொது மக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் 04.12.2023 அன்று விற்பனை செய்ய இயலாத ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை சில சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் அங்கே கொட்டிவிட்டுச் சென்றதாக தெரியவருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications