மீண்டும் ஏமாற்றம்..பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும்! குழு அல்ல..தமிழக முதல்வருக்கு பறந்த கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய குழுவை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கட்டாயம் அமல்படுத்துவோம் என கூறியதை நம்பிய நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை இம்முறை கட்டாயம் அமல்படுத்துவோம் என கூறியதை ஏற்று முழுமையாக கடந்த காலங்களில் போல இல்லாமல் நிச்சயம் அமல்படுத்துவார்கள் என நம்பினோம்.

பலமுறை அரசுக்கு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை வைத்த போது, நிதி நிலைமை சற்று சீரடைந்ததும், நிதி சார்ந்த பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு கூறி வந்தது. மற்ற மாநிலங்களில் பழைய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதை போல் நமது மாநிலத்திலும் அமல்படுத்துவார்கள் என முழுமையாக எண்ணினோம். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக பழைய ஒய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைநை்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மூன்று உறுப்பினர்கள் உள்ளடக்கிய ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
இது தமிழகத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்த அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பேரிடியாக அமைந்தது. அதுவும் இக்குழுவின் காலம் ஒன்பது மாதம் என்பது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. காரணம் குழு அமைப்பதே கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் கடத்தும் செயல் என்பதை கடந்த காலங்களில் பலமுறை நாம் கண்ட உண்மையாகும்.
கடந்தாண்டு பிப்.13-ம் தேதி அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தனர். இதை நம்பிய நிலையில், இந்த அறிவிப்பு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த குழு அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஒய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.
ஆராய குழு: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக, திமுக ஆட்சி மாறி மாறி தமிழகத்தில் அமைந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது.
2001 சட்டமன்ற தேர்தலிலும் திமுக அந்த வாக்குறுதியை கொடுத்திருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டுமென அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆராய மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அந்த குழு ஒன்பது மாதங்களில் அறிக்கை தரவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில்," ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, டாக்டர்.கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், Madras School of Economics, பிரத்திக் தாயள், இ.ஆ.ப., துணைச் செயலாளர் (வரவு செலவு), நிதித் துறை, உறுப்பினர் செயலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications