ஒரே நாளில் 28.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. தமிழக அரசு சாதனை.. மா.சு.வுக்கு முதல்வர் புகழாரம்!
சென்னை: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன. தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக அதனை போட்டு வருகின்றனர்.
Recommended Video
தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழக அரசு உச்சத்தில் கொண்டு சென்ற கொரோனா தொற்றை மிக விரைவாக கட்டுப்படுத்தியது. இதேபோல் மாநிலம் முழுவதையும் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு விரைவுபடுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் அடிக்கடி பேசி கூடுதல் தடுப்பூசிகள் பெற்றுக் கொடுத்தார்.

மெகா முகாம்கள்
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நிலையில் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தடுப்பூசிகள் விரைவாக செலுத்தப்பட்டன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த சிறப்பு முகாம்களில் இன்று காலை 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மிக ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தமிழகம் சாதனை
இந்த நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 28.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த மெகா முகாம்கள் மூலம் இன்று 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இலக்கை விட கூடுதலாக 8 லட்சம் தடுப்பூசிகள் அதிகம் செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்று 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு 16,00,195 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எங்கே அதிகம்?
இதேபோல் 45 வயது முதல் 60 வயது உட்பட்டவர்களில் 8,69,741 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 3,47,164 பேருக்கு இன்று ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தியதாக தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3.79 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 1,85,370 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. கோவையில் 1,51,685 பேருக்கும், திருப்பூரில் 1,21,634 பேருக்கும் வேக்சின் செலுத்தப்பட்டுள்ளது. திருச்சியில் 1,10,332 பேருக்கும், தஞ்சாவூரில் 1,10,120 பேருக்கும், மதுரையில் 1,05,036 பேருக்கும், திருவள்ளூரில் 1,01,213 பேருக்கும் இன்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக விருதுநகரில் 21,029 பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கிறது.

ஸ்டாலின் பாராட்டு
இன்று தமிழ்நாடு அதிக அளவு தடுப்பூசி செலுத்தி சாதனை செலுத்தியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.
இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!

மா.சுப்பிரமணியன்
மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி! தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications