முட்டுக்காட்டில் மிகப்பெரிய பிளான்.. முதல்வர் ஸ்டாலினின் கனவு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!
சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, சென்னையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.487 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

அதன் அடிப்படையில், 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், ரூ.102 கோடியிலும்; 10 ஆயிரம் பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ரூ.172 கோடியிலும்; கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ரூ.106 கோடியிலும் அமைய உள்ளது. அமட்டுமல்லாது, இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், வெளிப்புற பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, நுழைவு வாயில் உள்ளிட்டவற்றுக்கான பணிகள் ரூ.105 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. 2025ஆம் ஆண்டு இறுதி அல்லது 2026ஆம் ஆண்டு தொடக்கத்திற்கு உள்ளாக இந்த கட்டுமான பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, அங்கு இருப்பது போன்ற சிறப்பான வசதிகளுடன் தமிழ்நாட்டில் பன்னாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என விரும்பினார். அதன்படியே, உலகளாவிய தொழில் கண்காட்சிகள் - வர்த்தக மாநாடுகள் - தொழில்நுட்பக் கூட்டங்கள் - உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் - உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாகக் 'கலைஞர் Convention Centre' அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications