ஊக்க ஊதிய உயர்வு.. ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற உத்தரவு.. அதிகாரிகள் மீதும் ஆக்ஷன்
சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுடைய கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பில் படித்து உயர்கல்வித் தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும். ஆனால் சம்பந்தப்பட்ட பாடங்களில் இல்லாமல் வேறு பாடங்களில் படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருந்தது. அந்த தொகையை திரும்ப வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தவறு செய்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில், 8,000க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில், 6 முதல், 8ம் வகுப்பு வரை பாடம் நடத்த, பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் இருக்கிறாரகள். இவர்களில் பெரும்பாலோர், இடைநிலை ஆசிரியராக இருந்து, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதேநேரம் இவர்களுக்கு ஊக்க ஊதியர்வு தருவதற்கு அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

அந்த வகையில் தொடக்கக் கல்வியின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுடைய கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்ள 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற முதன்மை பாடங்களை பட்டப்படிப்பில் படித்து உயர்கல்வித் தகுதி பெற்றால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இப்படி படித்து ஊக்க ஊதிய உயர்வு பலர் பெற்று வருகிறார்கள்.
அதேநேரம் சிலர்சம்பந்தப்பட்ட பாடங்களில் இல்லாமல், வேறு பாடங்களில் உயர்கல்வி படித்துவிட்டு பலரும் ஊக்க ஊதியம் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக தமிழ் ஆசிரியர்கள் சிலர், அதேபோல் சில வேறுபாட ஆசிரியர்கள், எம்ஏ, எம்.காம்., படித்துவிட்டு ஊக்க ஊதியம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்றம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவு தவிர, மற்ற பாடங்களில் ஊக்க ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களின் சம்பளத்தை மறு சீரமைப்பு செய்ய உத்தரவிட்டது.
இதன்படி தொடக்க கல்வித்துறையில், ஊக்க ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட்ட பாடம் தவிர்த்து, மற்ற பாடங்களில் ஊதிய உயர்வு பெற்றிருந்தால், அவர்களின் பணி பதிவேட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கற்பிக்கப்படாத பாடங்களை படித்து பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ வழங்க இயலாது என தற்போது கல்வித்துறை அறிவித்திருந்தது. அரசின் அறிவிப்பிற்கு பின்னரும் 766 ஆசிரியர்களுக்கு தவறுதலாக ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டதாக கல்வித்துறைக்கு தகவல் கிடைத்துளளது.
இதனையடுத்து அவ்வாறு தவறுதலாக ஊக்க ஊதியம் அனுமதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல என அறிவித்துள்ள கல்வித்துறை, தவறுதலாக உயர்கல்விக்கான ஊக்க ஊதிய தொகையினை பெற்று வரும் 766 ஆசிரியர்களிடம் இருந்து உரிய அலுவலர் அந்த தொகையினை பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்ப்பதோடு, அதன் விவரத்தினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் தவறுதலாக ஊக்க ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அந்த விவரத்தினை 20-ந்தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications