பத்தல..பத்தல! தமிழக அரசுக்கு பறந்த பாமக அன்புமணியின் கோரிக்கை! கண்டிப்பாக ‘இதை’ செய்யனும்!
சென்னை: தமிழகத்தில் நேரடி அந்நிய முதலீடு போதுமானதல்ல என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். எனவே, அதிக முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தமாக 5,836 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடுகளை தமிழக அரசு பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்நிய முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் நேரடி அந்நிய முதலீடு போதுமானதல்ல என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் அந்நிய முதலீடுகள்
இதுகுறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2022-23-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5,836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5,640 கோடியை விட ரூ.196 கோடி அதிகம் தான் என்றாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் போதுமானதல்ல.

5-வது இடத்தில் தமிழகம்
இதே காலத்தில் மராட்டியம் ரூ.40,386 கோடி (31.59%), குஜராத் ரூ,24,692 கோடி (19.31%), கர்நாடகம் ரூ.21,480 கோடி (16.80%), தில்லி ரூ.17,988 கோடி (14%) அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ள நிலையில், தமிழ்நாடு 4.46% மட்டுமே ஈர்த்திருக்கிறது. ஐந்தாவது இடத்தையே பிடித்திருக்கிறது. 2019 அக்டோர் முதல் கடந்த ஜூன் வரையிலான சுமார் மூன்றாண்டுகளில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு ரூ.52,676 கோடி (4%) மட்டுமே அந்நிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இதிலும், மராட்டியம், கர்நாடகம், குஜராத், தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது.

மிகச்சிறந்த மனிதவளம்
இந்தியாவில் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பில் மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மிகச்சிறந்த மனிதவளம் உள்ளது. இந்தக் காரணிகளின்படி பார்த்தால் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதல் இரு இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும்.

அதிக முதலீட்டை ஈர்க்க வேண்டும்
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் அதிகம் தேவை. இதற்காக பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல, தமிழகத்தை 5 தொழில் முதலீட்டு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டு ஆணையரை நியமித்து, அதிக முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications