தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனையா? தகவல் பலகை மட்டுமே.. தமிழக அரசு மறுப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் வகையில் புதிய இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கி வருவதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து புதிய விளக்கம் வெளியாகியுள்ளது.
தினமும் முட்டை விலை, பிராய்லர் கோழி விலை நிர்ணயித்து அறிவிக்கப்படுவது போல் ஆடு, மாடு, கோழி விலையும் அறிவிப்பதற்கு புதிய இணையதளம் உருவாக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி விலையில் மாற்றங்கள் உள்ளன. சென்னை விலைக்கும், மற்ற ஊர்களில் ஆட்டிறைச்சி விலைக்கும் வித்தியாசம் உள்ளது. இன்றைக்கு எங்கு என்ன விலை என்பது வெளிப்படையானதாக இல்லை. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை விற்பனை வீலையை வெளிப்படையாக தெரியப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
தினமும் உயிருடன் ஆடு, கோழி விலை மற்றும் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி விற்பனை விலையை அப்டேட் செய்து அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் டாக்டர் என் சுப்பையன், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதன்படி இனி தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி விற்பனை விலை தொடர்பாக அரசின் புதிய முயற்சி பற்றித் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "இனி தமிழ்நாடு ஆட்டிறைச்சி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தனி இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தினமும் இறைச்சி விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தினமும் எப்படி முட்டை விலை மற்றும் பிராய்லர் கோழி விலை நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்படுகிறதோ அதேபோல் இனி ஆடு, மாடு, கோழி இறைச்சிகளின் விலையும் அறிவிப்பு செய்யப்படும். ஆடு மற்றும் கோழி உயிருடன் என்ன விலை? இறைச்சி என்ன விலை? என இணையதளத்தில் தினசரி அப்டேட் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி விற்பதற்கு தமிழ்நாடு அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு ஆட்டிறைச்சி மற்றும் கால்நடைகள் விற்கப்படுவது தடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படுமா எனக் கேள்வி எழுந்த நிலையில், அதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டிறைச்சி விலையை அறிவிப்பதற்கான தகவல் பலகை மட்டுமே தயாராகிறது என்றும் ஆட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கான விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய முடியாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆட்டிறைச்சி மற்றும் நாட்டுக்கோழி இறைச்சிக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய உள்ளதாக வெளியான தகவலுக்கு கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications