காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
சென்னை: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவபடத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் இருந்து சேலத்துக்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அக்டோபர் 13-ந் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து விழுப்புரத்தில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு அக்டோபர் 14-ந் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக காவேரி மருத்துவமனை கூறியிருந்தது. இதனையடுத்து அமைச்ச துரைக்கண்ணுவுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். தமிழகத்தில் கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், எம்.பி. வசந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் உள்ளிட்டோர் ஏற்கனவே பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணு மரணத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெரும் அன்புக்குரிய மாண்புமிகு தமிழக வேளாண் துறை அமைச்சர், திரு.துரைக்கண்ணு அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
— SP Velumani (@SPVelumanicbe) October 31, 2020
சென்னையில் தற்போது அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அமைச்சர் துரைக்கண்ணுவின் திரு உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து சென்னையில் இருந்து துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊராக ராஜகிரிக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

நல்லடக்கம்
இராஜகிரியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு சிறிது நேரம் வைக்கப்பட்டு பிறகு மக்கள் பார்வைக்காக வீட்டின் அருகே உள்ள ஐயனார் கோயில் மைதானத்தில் துரைக்கண்ணு பூத உடல் வைக்கப்பட்டது. பின்னர் வன்னியடியில் உள்ள தோப்பில் அமைச்சர் துரைக்கண்ணு உடல் அரசு மரியாதையுடன் 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications