பணிகள் திருப்தியாக இல்லையென்றால்.. அரசு வழக்கறிஞர்களுக்கு அசன் முகமது ஜின்னா விடுத்த வார்னிங்!
சென்னை: திருப்திகரமாக பணி ஆற்றாத அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் பற்றிய விபரம், மேல் நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பப்படும் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வருங்காலங்களில் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர்களின் பணிகள் அவ்வப்பொது ஆய்வு செய்யப்படும் என்பதையும் அவர் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் ஆய்வுக் கூட்டத்தின் போது அவர் இதனை கூறினார்.

மேலும், அசன் முகமது ஜின்னா அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் ஆய்வுக் கூட்டத்தின் போது பேசியதாவது; மத்தியில்
''குற்ற வழக்குகளை நடத்தும்போது தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற ஒரே நோக்குடன் வழக்கினை நடத்தாமல் "நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது" அதே சமயத்தில் "குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடக்கூடாது" என்கிற எண்ணத்தோடு வழக்குகளை நடத்த வேண்டும்.''
''அரசு குற்ற வழக்குரைஞர் காவல்துறையின் வழக்குரைஞர் அல்ல! அவர்கள் பொதுமக்களுக்கான வழக்குரைஞர்கள் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். ஒரு சில காவல் அதிகாரிகள் ஜோடித்து போடும் பொய் வழக்குகளுக்குத் துணை போகாமல் நீதிமன்றம் மற்றும் பொதுமக்களுக்கு உண்மையை கண்டறிவதற்கு அரசு வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும்.''
''வழக்குகளை நடத்தும்போது காவல்துறையினர் எவரேனும் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது அந்த மாநகரத்தின் சம்பந்தப்பட்ட காவல் துறை ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடில் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் காவல் துறை மேல் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.''
''மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காண அந்த மாவட்டத்தினுடைய பொறுப்பு உயர் நீதிமன்ற நீதிபதியின் வழிகாட்டுதல் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.''
''குற்றவியல் நடைமுறை சட்டம் 321-வது பிரிவின்படி தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் எந்த நிலையிலும் ஒரு வழக்கை திரும்ப பெறுகிற அதிகாரம் அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுக்கு உள்ளதால் மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் வழக்கு திரும்ப பெறுகிற அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். ''

''குறிப்பிட்ட வழக்குகளில் ஜாமீன் தருவது தவறு என கருதப்படுகின்ற சமயத்தில் ஜாமின் கொடுப்பதற்கு ஆட்சேபணை செய்யப்பட வேண்டும். மேலும், ஆட்சேபனைகளை மீறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால் அதனை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அவ்வப்போது, சட்டக் கருத்துக்களை (Legal Opinion) உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்காது உரிய காலத்திற்குள் கேட்கப்படும் சட்டக் கருத்துக்களை அனுப்பி வைக்கவேண்டும் என இக்கூட்டத்தின் வாயில் தங்களை கேட்டுக் கொள்கிறேன்.''
''மேலும் வருங்காலங்களில் மாவட்ட குற்றவியல் வழக்குரைஞர்களின் பணிகள் அவ்வப்பொது ஆய்வு செய்யப்படும். திருப்திகரமாக பணி ஆற்றாதவர்கள் பற்றிய விபரங்கள் உரிய மேல் நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பப்படும். எனவே, பணியில் முழுக் கவனம் செலுத்தி நீதிமன்றங்களுக்கு சரியான முறையில் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ''












Click it and Unblock the Notifications