தூக்கிட்டு வாங்க அந்த "வெள்ளை" வள்ளுவரை.. கோவை வேளாண் பல்கலை.யில்.. "காவி" வள்ளுவர் படம் நீக்கம்!
சென்னை: கோவை வேளாண் பல்கலைக் கழக்க நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டுவிட்டதாக தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவித்து அவருக்கு மதச்சாயம் பூசும் நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும் பாஜகவினர் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தையே பல இடங்களில் பயன்படுத்துகின்றனர்.

திருவள்ளுவரைப் பொறுத்தவரை மதங்களுக்கு அப்பாற்பட்ட தமிழர். ஆனால் அவருக்கு மதச்சாயம் பூசுவதை ஏற்க முடியாது என்பது வாதம். இந்த நிலையில் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டிருப்பது ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
இந்த காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ட்விட்டர் பக்கத்தில் எழுதி உள்ளதாவது: கோவை வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் 2017-18 ஆம் ஆண்டு அடிமை அதிமுக அரசின் சார்பில் காவி நிறம் கொண்ட அய்யன் திருவள்ளுவரின் புகைப்படம் வைக்கப்பட்டது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது. எனது கவனத்திற்கு வந்தவுடன் அதிகாரிகளை அழைத்து பேசி இப்போது அந்த புகைப்படத்தை அகற்றிவிட்டு தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான அய்யன் திருவள்ளுவர் படம் அதே இடத்தில் பொருத்தப்பட்டது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications