கிளாம்பாக்கம் படிப்பினை: இன்னமும் சென்னை 'வீங்கி வெடிக்கனுமா'? திருச்சி, மதுரையை டார்கெட் செய்யலாமே!
சென்னை: சென்னை புறநகர் பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதாவது செங்கல்பட்டுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் கடும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
சென்னை மாநகரம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பல்வேறு கிராமங்களை ஒருங்கிணைத்து உருவான செயற்கையான நகரம்தான். நாடு விடுதலைக்குப் பின்னர் சென்னையை மையமாக கொண்டதாக மாநில அரசின் திட்டங்கள் அமைந்ததால் சென்னை மாநகரை நோக்கி பிற மாவட்ட மக்கள் படையெடுக்க தொடங்கினர்.

எத்தனை மாவட்டங்கள்?: இதனால் சென்னை மாநகர பகுதிகள் என்பது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களோடு இணைந்ததாக விரிவாங்கிவிட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்த ஏரிகள் காணாமல் போய் அத்தனையும் பல்வேறு வகை நிறுவனங்களாக, குடியிருப்புகளாக உருமாறிப் போய்விட்டன. இதனால் இயல்பாகவே பெருமழை வெள்ள பாதிப்பு அன்றாட நிகழ்வாகிவிட்டது சென்னை மக்களுக்கு.
விவாதமான கிளாம்பாக்கம்: சென்னையில் மக்கள் நெரிசல் அதிகமாகிக் கொண்டே போனதாதால் பிராட்வே டூ கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் என சென்னையில் புறநகர் பேருந்து நிலையங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது செங்கல்பட்டு நகருக்கு 20 கிமீ தொலைவுக்கு முன்னர் உள்ளது. அதாவது செங்கல்பட்டுக்கே போய்விட்டதே சென்னை மாநகரத்தின் புறநகர் பேருந்து நிலையம் என்பதுதான் யதார்த்தம். இதுதான் இப்போது கடும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இந்த விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி அரசு என்னதான் செய்ய வேண்டும் இத்தகைய விவாதங்களை, அதிருப்தியை தவிர்க்க? என்பதுதான் தற்போதைய தேவை.
எவ்வளவுதான் திணிப்பது?: சென்னை மற்றும் அதனைச் சுற்றிய மாவட்டங்களில் அல்லது சோ கால்ட் சென்னை புறநகரில் போதும் போதும் என்றளவுக்கு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உருவாகிவிட்டன. இன்னமும் கூடுதலாக இத்தகைய நிறுவனங்களை தொழிற்சாலைகளை திணித்துக் கொண்டே இருந்தால் சென்னை பெருநகரம் வீங்கி வெடிக்கும் என்ற நிலைமைதான். அதனால் போதும்.. சென்னை மற்றும் சோ கால்ட் புறநகருக்கான செயல் திட்டங்கள்.
திருச்சி, மதுரையை நோக்கி.. : இனியேனும் திருச்சி, மதுரையை மையமாக வைத்து இவற்றை சுற்றிய மாவட்டங்கள் பயனடைய ஏதுவாக புதிய திட்டங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களை உருவாக்க வேண்டும். தற்போது மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டது போல புதிய ஐடி நிறுவனங்கள், சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை தென் மாவட்டங்கள்- உள் மாவட்டங்களை உள்ளடக்கியதாக உருவாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் சென்னை பெருமாநகரம் மூச்சுவிடவும் முடியும்; சென்னையை நோக்கிய படையெடுப்பும் நிற்கும். இல்லையேல் சென்னையை நோக்கிய பிற மாவட்ட மக்களின் வாழ்வாதார தேடல் தொடரவே செய்யும் என்பதை இனியேனும் அரசு புரிந்து கொள்வதே காலத்தின் தேவையுமாகும்.












Click it and Unblock the Notifications