தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு..கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 2021-22 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் மதிப்பெண் மூலமே மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2021-22 கல்வியாண்டிற்கான நீட் கலந்தாய்வை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் 2021-22 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்களை நிரப்பக் கடந்த டிசம்பர் 19 முதல் ஜன. 7 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன, இதில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள நிலையில், அதில் 1,930 இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5%, அதாவது 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 விண்ணப்பங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 விண்ணப்பங்கள் என மொத்தம் 40,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். www.tnmedicalselection.net, www.tnhealth.tn.go.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தரவரிசையைத் தெரிந்து கொள்ளலாம்.
நம்பர் 1 முதல்வர் என்பதில் எனக்கு பெருமையில்லை! தமிழகத்தை முதல் மாநிலமாக்க வேண்டும்: ஸ்டாலின் பேச்சு
சிறப்புப் பிரிவினர் மற்றும் 7.5% இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் வரும் ஜன 27 முதல் ஜன.29 வரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜன. 30 முதல் பொதுப்பிரிவினருக்கு ஆன்லைன் வழியாகக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.