“சபாநாயகர் அப்பாவு எங்களை கிண்டல் செய்கிறார்".. சட்டப்பேரவையில் எடப்பாடி பரபர குற்றச்சாட்டு!
சென்னை: "நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து சிரிக்கிறார். 'போங்க போங்க' என கிண்டல் செய்கிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆவேசமாக பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டப்பேரவை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுகவினர் பலர் கலந்துகொண்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. செங்கோட்டையனின் வாக்கு முக்கியமானதாகக் கருதப்படும் நிலையில் அவருடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பாஜகவினர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். பாமகவினரும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மக்கள் பிரச்சனைகளை சட்டப்பேரவையில் பேசும்போது சபாநாயகர் அப்பாவு பாரபட்சமாக நடந்து கொள்கிறார். சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்; கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்வதில்லை.
பேரவைத் தலைவர் பெரும்பாலான நேரங்களில் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்; தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். சபாநாயகரின் செயல்பாடு விதிகளுக்கு முரணாக உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் பேசினால், பேரவைத்தலைவர் அவசரப்படுத்துகிறார்.
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது அப்பாவு அவசரப்படுவது ஏன்?. யாருடைய கட்டளையின்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது சபாநாயகர் இடையூறு செய்கிறார்?. ஆளுங்கட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக சபாநாயகர் என்பவர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவோம் எனக்கூறிய திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்துவோம் எனக்கூறிய திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?. கடந்த 4 ஆண்டுகளில் சட்டப்பேரவை 400 நாட்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 116 நாட்கள் மட்டும் நடத்தியது ஏன்?.
கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்ததை ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்தார். பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் இருட்டடிப்பு செய்கிறார் சபாநாயகர் அப்பாவு. நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து நகைக்கிறார். 'போங்க போங்க' என கிண்டல் செய்கிறார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார். பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு போதிய பலம் இல்லாத நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இரண்டாம் முறையாகவும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது.












Click it and Unblock the Notifications