தேர்தலில் யாருக்கு ஆதரவு? 15 நாட்களில் முடிவு.. வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெற முயன்று வருகின்றனர். வணிகர் சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள், அமைப்புகள் உள்ளிட்டவற்றின் ஆதரவை தேர்தலில் பெறும் முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு, தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிகர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. சென்னை விருகம்பாக்கம் சட்டசபை தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவின் தந்தை விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவராக உள்ளார். இந்நிலையில் அவர் சார்ந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு இந்த முறை யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் சார்பில், கடந்த நவம்பர் மாதம் கோவையில் பாராட்டு விழா நடத்தினார். 4 அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரம்புகள் 5%, 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி ஏற்படுத்திய குளறுபடிகளை சரிசெய்யவே, ஒருவழியாக தற்போது இந்த ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்காக, நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை முன்னின்று நடத்தினார் விக்கிரமராஜா.
இதனால், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமா என்ற யூகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, "பல்வேறு கட்சிகளும் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வியாபாரிகளின் கோரிக்கைகளை அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்ப இருக்கிறோம். அந்த கோரிக்கைகளை எந்தக் கட்சி நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக ஓப்புதல் தருகிறதோ, அதன் பிறகு ஆட்சிமன்றக் குழு கூடி யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வோம். தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு குறித்து அடுத்த 15 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய விக்கிரமராஜா, "தேர்தல் சமயத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கையில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற நடைமுறை உள்ளது. சிறு வியாபாரிகள் கூட ஒரு லட்சம் ரொக்கம் கொடுத்து பொருட்கள் வாங்குவது வழக்கம். விலைவாசி அதிகமாக உள்ள நிலையில், இன்றைய நிலையில் ரூ.2 லட்சம் வரை ரொக்கம் கொண்டு செல்லலாம் என்ற விதியை ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா, சென்னை விருகம்பாக்கம் சட்டசபை தொகுதி திமுக எம்.எல்.ஏ-வாக உள்ளார். அவருக்கு மீண்டும் சீட் கொடுக்கப்படுமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில், பிரபாகர் ராஜா அளித்துள்ள பேட்டி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications