ஜோதிமணிக்கு எதிரான கோபண்ணா பதிவு.. சத்தியமூர்த்தி பவனாக மாறிய ட்விட்டர் .. ஒரே சலசல!
சென்னை: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் கோபண்ணா போட்ட பதிவால் ட்விட்டர் சமூக வலைதளமே சத்தியமூர்த்தி பவனைப் போல அடிதடி களமாகி கிடக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றை முன்வைத்து ஜோதிமணி எம்.பி. அண்மையில் ஒரு பதிவை போட்டிருந்தார். ஃபேஸ்புக் பக்கத்தில், காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை. எனது தலைவர் Rahul Gandhi பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

ரத்தம் கொதிக்கிறது
உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு என கொந்தளித்தார் ஜோதிமணி. ஜோதிமணிக்கு ட்விட்டர் பக்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ. கோபண்ணா ஒரு பதில் கொடுத்தார்.

கோபண்ணா ட்விட்டர் பதிவு
அந்த பதிவில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு பல்வேறு கட்டங்களாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுள்ளன. தனிப்பட்ட எந்த தலைவரும் முடிவெடுக்க முடியாத நிலையில் எந்த தவறு நடக்க வாய்ப்பில்லாத ஜனநாயக நடைமுறையை கொச்சைப்படுத்துவது அப்பட்டமான கட்சி விரோத செயல் அல்லவா ? வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக கருத்துக்களை பரப்பி நமது தலைவர்களை நாமே களங்கப்படுத்தலாமா ?

டெபாசிட் இழந்த ஜோதிமணி
2014 மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்த @jothims வாய்ப்பு வழங்கிய தலைவர்களை இழிவுபடுத்தலாமா ? கடந்த 2016 கரூர் சட்டமன்றத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவுது ஒரு அரசியல் மோசடி என பதிவிட்டிருந்தார். கோபண்ணாவின் இந்த பதிவுதான் அவரது ட்விட்டர் பக்கத்தையே மினி சத்தியமூர்த்தி பவனாக அதாவது அடிதடி களமாக்கி இருக்கிறது.

ஜோதிமணி ஆதரவாளர்
@mohamedsha2020 என்ற பதிவர், காங்கிரஸ் கட்சி சார்பாக எந்த ஒரு மக்கள் போராட்டத்தையும் மக்களை சந்தித்து நீங்கள் நடத்தி பார்த்ததில்லை, ஆனால் ஜோதிமணி அப்படி இல்லை,, உழைக்காமல் உண்ண விரும்பினால் கட்சி..... என ஜோதிமணி ஆதரவாளர் ஒருவர் சீறியுள்ளார்.

உடனே பட்டம் சூட்டுவீங்களா?
@ONaGVYuKSHnN0jL என்ற காங்கிரஸ் கட்சிக்காரர், Replying to @AGopanna @KS_Alagiri and @dineshgrao கட்சியில் நடக்கும் உண்மையை வெளியே சொன்னால் அராஜக அரசியல் என்று உடனே பட்டம் சூட்டுவது !! நல்லா வருவீங்க சார் நீங்க என கொதிக்கிறார்.

இப்படித்தான் மிரட்டுவீங்களா?
jayachandran என்ற இன்னொரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், @AGopanna @KS_Alagiri and @dineshgrao ஜோதிமணி அவர்கள் அவரின் கருத்தை தெரிவித்தால் இப்படித்தான் மிரட்டுவீர்களா? என கேள்வி கேட்டுள்ளார்.

பாஜக டூ காங்.
@aranthangiyan என்ற ட்விட்டர் வாசி, @AGopanna @KS_Alagiri and @dineshgrao உங்கள மாதிரி ஆள் இருந்தா அடுத்த முறை கட்சியே இருக்காது. பிஜேபில் இருந்து வந்தவருக்கு தலைவர் பதவி தாரீங்க. காலங்காலமாக கட்சில இருக்கறவங்க வாரிசுக்கு சீட் கொடுத்தா கூட லாஜிக் இருக்கு நேத்து வந்தவங்களுக்கு சீட் கொடுக்கறதே பெரிசு இதுல அவங்க வாரிசுக்கு சீட் கொடுக்கறீங்க விளங்கும் என சாபமிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications