8 கோடி தமிழர்களுக்கும் மகிழ்ச்சி! ராகுல் பேச்சால் நாங்கள் பெருமை கொள்கிறோம்! K.S.அழகிரி புகழாரம்!
சென்னை: நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ராகுல்காந்தி பேசியதை நினைத்து பெருமைப்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ராகுல்காந்தியின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ராகுல் பேச்சு
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை, மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தியதோடு, பாரதிய ஜனதா கட்சி தனது வாழ்நாளில் தமிழகத்தை ஆள முடியாது என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

ஸ்டாலின் வரவேற்பு
மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை ராகுல்காந்தி வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இதன்மூலம் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார். இக்கருத்தை கூறியதற்காக தி.மு.கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்று டிவிட்டரில் கருத்து கூறியிருக்கிறார்.

மகிழ்ச்சிக் கடல்
மக்களவையில் ராகுல்காந்தி தமிழகத்தைப் பற்றி குறிப்பிட்டு பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு 'நான் ஒரு தமிழன்' என்று பதில் கூறியிருப்பது எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தியாவில் உள்ள பன்முக கலாச்சாரத்தை மதிப்பதோடு, வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற வகையில், ராகுல்காந்தி இத்தகைய கருத்தை மக்களவையில் மிகுந்த எழுச்சியோடு கூறியதை குறிப்பிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்து வரவேற்றிருக்கிறார்.

நன்றியும் பாராட்டும்
தேசிய அளவில் ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு, தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருக்கிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது நன்றியை வெளிப்படுத்தியிருப்பது மதச்சார்பற்ற சக்திகளுக்கு மிகுந்த வலிமையை வழங்கும் என்பதை உறுதியோடு கூற விரும்புகிறேன்.
தமிழக மக்கள் பெருமைப்படுகிற வகையில் மக்களவையில் உரையாற்றிய தலைவர் ராகுல்காந்தி அவர்களையும், அந்த உரைக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் பாராட்டி பெருமைப்படுவதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications