கொரோனா பீதி மக்களை வாட்டி வதைக்கிறது... விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு தோல்வி -கே.எஸ்.அழகிரி
சென்னை: கொரோனா தொற்று குறித்து மக்களிடையே அச்சம், பீதி வாட்டி வதைத்து வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று குணப்படுத்தக் கூடியது என மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய - மாநில அரசுகள் முழு தோல்வியடைந்து விட்டதாக அவர் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று!!
3 லட்சம் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. சென்னையை விட கோவை, விருதுநகரில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று மட்டும் 5,994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 119 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிற அதேநேரத்தில் மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.
6,120 படுக்கைகள்
85 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகள் 6,120. தமிழகம் முழுவதும் உள்ள 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 28,466 படுக்கைகள் உள்ளன. கொரோனா சிகிச்சைக்கான வென்டிலேட்டர் வசதி 1,775 தான் உள்ளன. அதேபோல தனியார் மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகள் 3,410. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய நிலை தமிழக அரசுக்கு இருக்கிறது.
அதிக சோதனை
கொரோனா பரிசோதனையைப் பொறுத்தவரை இந்தியாவில் 10 லட்சம் பேரில் 17,805 பேருக்குத் தான் சோதனை செய்யும் வசதி உள்ளது. ஆனால், அமெரிக்காவில் 1,80,218, ரஷ்யாவில் 2,05,833, தென் ஆப்ரிக்காவில் 52,109 என பரிசோதனை வசதி இருக்கிறது. அதிகமாக பரிசோதனை செய்தால் தான் விரைவாக கொரோனாவை ஒழிக்க முடியும்.
அரசு தோல்வி
பொதுவாக மக்களிடையே கொரோனா தொற்று குறித்து மத்திய - மாநில அரசுகள் ஊடகங்களின் பிரச்சாரம் காரணமாக மக்களிடையே அச்சம், பீதி வாட்டி வதைத்து வருகிறது. கொரோனா தொற்று குணப்படுத்தக் கூடியது, இறப்பு விகிதம் குறைவாக கொண்டது என்ற உண்மை நிலையை மக்கள் அறியவில்லை. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய - மாநில அரசுகள் முழு தோல்வியடைந்து விட்டன.
நம்பிக்கையில்லை
கொரோனா தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பொதுநல அமைப்புகளான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு மத்திய - மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். மக்களிடமிருந்து அரசு அன்னியப்பட்டு இருப்பதால் அரசின் பிரச்சாரத்தில் மக்களிடையே விழிப்புணர்வும், நம்பிக்கையும் ஏற்படவில்லை. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பொதுநல அமைப்புகளை பயன்படுத்த வேண்டும்.