டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி ஹைகோர்ட்டில் மனுதாக்கல்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2019ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த புகாரை முதலில் மறுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பின் சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தது.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி, இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் உள்பட பலரை கைது செய்துள்ளது. மேலும், முறைகேடு நடந்ததாக கூறப்படும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியதுடன், அடுத்த தேர்வுகளில் பங்கேற்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்த விசாரணையில், குரூப் 2 ஏ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குரூப் 4 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், அழியும் மை-யை பயன்படுத்தியதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது, முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாக்க முயற்சிப்பதாகவே உள்ளது என மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர், சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் எனக் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகளின் ஆசியுடன் நடந்துள்ள இந்த முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டுமென்றால், இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வழக்குகளை சிபிஐ-யிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications