3,665 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு! 2.25 லட்சம் பேர் கடும் போட்டி!
சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இன்று நடைபெறும் 2ஆம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வில் சுமார் 2.25 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 45 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், முதல்முறையாக விண்ணப்பதாரர்களின் இடது கை பெருவிரல் ரேகை சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) கடந்த ஆகஸ்ட் மாதம், மொத்தம் 3,665 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில், காவல் துறையில் 2,833 பணியிடங்கள், சிறைத்துறையில் 180 சிறைக் காவலர் பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் 631 தீயணைப்பாளர் பணியிடங்கள் மற்றும் பழங்குடியினருக்கான 21 சிறப்பு இடங்கள் அடங்கும்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 2.25 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்காக பதிவு செய்திருந்தனர். இன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று எழுத்துத் தேர்வு
மாநிலம் முழுவதும் 45 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு மையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், முதல்முறையாக விண்ணப்பதாரர்களின் இடது கை பெருவிரல் ரேகை சரிபார்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்வின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
அனுமதி நேரம் மற்றும் விதிமுறைகள்
விண்ணப்பதாரர்கள் காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டர். அந்த நேரத்திற்குப் பிறகு எந்த நபருக்கும் நுழைவு அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெளிவாக கூறியிருந்தனர். மேலும், தேர்வரங்கிற்குள் கைப்பேசி, ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், ப்ளூடூத் சாதனம் போன்ற மின்னணு பொருட்கள் எதையும் கொண்டுவரக் கூடாது எனக் கடுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அடையாள ஆவணங்கள் கட்டாயம்
தேர்வுக்கு வருபவர்கள் தங்களின் நுழைவுச்சீட்டு உடன் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலைக் கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும். அடையாளச் சான்று இல்லாமல் வருபவர்கள் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
உடல் தகுதித் தேர்வு
இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களே அடுத்த கட்டமான உடல் தகுதி மற்றும் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பின், இறுதிச் சுற்று நேர்காணல் நடைபெறும். பணியிடங்களின் எண்ணிக்கையை விட விண்ணப்பதாரர்கள் பல மடங்கு அதிகம் இருப்பதால், இந்த ஆண்டின் காவலர் தேர்வு மிகக் கடுமையான போட்டியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. தேர்வு முடிந்ததும் ஆன்சர் கீ வெளியிடப்பட்டு, பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும். பின்னர் உடற்தகுதித் தேர்வின் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications