எம்பிக்கள் நிதியை 2 வருடம் ரத்து செய்ய அரசு முடிவு.. கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு
சென்னை: எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதியை மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வதற்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் காணொளிக் காட்சி மூலம் இன்று நடந்தது. இதில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலர் கணொளி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனாவை ஒழிப்பது பற்றியும் பிரதமர் மோடி விவாதித்தார். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில். கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அதிகமான அளவு நிதி தேவைப்படுகிறது. எனவே சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தேவையாகும். 2020- 21, 2021 -22 இரண்டு ஆண்களுக்கு எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான இந்த நிதி 7900 கோடி ரூபாயாகும். இதனை சுகாதார பணிகள், கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், அரசாங்கம் நிதிகளைப் பெற விரும்பினால் பல வழிகள் உள்ளன, ஆனால் எம்.பி.க்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதியை அகற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தொகுதி எம்.பி.க்களை பணிநீக்கம் செய்வதற்கும், திருட்டுத்தனமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்குமான இது ஒரு மோசமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications