கருணாநிதியின் 'நிழல்'! மின்வாரிய ஊழியர் டூ மின்சாரத்துறை அமைச்சர்! ஆற்காடு வீராசாமி யார் தெரியுமா?
சென்னை: ஒரு காலத்தில் கருணாநிதியின் நிழல் போல் அவரை பின் தொடர்ந்து பயணித்த திமுகவின் மூத்த முன்னோடியான ஆற்காடு வீராசாமியை பற்றித் தான் இன்றைய Throwback stories வரிசையில் பார்க்க இருக்கிறோம்.
கருணாநிதிக்கு வலதுகரமாகவும் திமுகவின் உட்கட்சி பிரச்சனைகள் மட்டுமின்றி மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையேயான அண்ணன் தம்பி பஞ்சாயத்துகளுக்கும் ஒரு காலத்தில் மத்தியஸ்தராக விளங்கியவர் ஆற்காடு வீராசாமி.

அரசுப்பணி: மின் வாரிய தலைமை பொறியாளருக்கு உதவியாளராக அரசு பணியில் சேர்ந்த இவருக்கு, காலம் கொடுத்த கொடையாக மின்சாரத்துறை அமைச்சர் பதவியே பிற்காலத்தில் கிடைத்தது. வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள குப்பாடிசத்திரம் என்ற குக்கிராமத்தில் இருந்து சென்னை சூளை பகுதிக்கு குடிவந்த இவருக்கு, திமுகவில் கிடைத்த முதல் கட்சிப் பதவி சூளை பகுதிச் செயலாளர்.

பேராசிரியர் அன்பழகனின் ஆரம்பகால அறிமுகம் மந்திரியாகவும், திமுக பொருளாளராகவும் உயர ஆற்காட்டாருக்கு வழிவகுத்து கொடுத்தது.
ஆற்காடு வீராசாமியை பொறுத்தவரை 1996-2011 வரையிலான 15 ஆண்டு காலம் திமுகவில் அதிகாரம் படைத்த நபராக வலம் வந்தார்.
இதன் காரணமாகவே கோபாலபுரத்திற்கும், ஆழ்வார்பேட்டைக்கும் செல்வதற்கு முன், எதற்கும் ஆற்காட்டார் காதிலும் போட்டு வைப்போம் என எண்ணி அவரது அண்ணா நகர் இல்லத்தில் கட்சியினர் சாரை சாரையாக குவிவார்கள். ஆற்காடு வீராசாமிக்கும் முரசொலி மாறனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தும் இருவரையும் விட்டுக்கொடுக்காமல் பார்த்துக் கொண்டார் கருணாநிதி.
மின் வாரிய ஊழியர்: தமிழ்நாடு மின் வாரிய ஊழியராக தனது பணியை தொடங்கியதாலோ என்னவோ, மின்வாரியம் தொடர்பான விவகாரங்களில் அனைத்து தகவல்களையும் அத்துபடியாக வைத்திருந்தார். 2008-ம் ஆண்டுக்கு பிறகு உடல்நலக் குறைவு, வயது முதிர்வு காரணமாக தடுமாறத் தொடங்கினார். துறை ரீதியான செயல்பாடுகளில் பழைய வேகம் குறைந்தது. விளைவு மின் வெட்டு பிரச்சனை திமுக ஆட்சியையே பலி வாங்கும் அளவுக்கு சென்றது.

இதனிடையே மு.க.ஸ்டாலின் பொருளாளராக வர வேண்டும் என்பதற்காக அந்தப் பதவியில் இருந்து விலகி முழுநேர அரசியலுக்கு விடை கொடுத்தார். கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் மனஸ்தாபங்களை உடனடியாக தலையிட்டு அதை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆற்காட்டார் கெட்டிக்காரராக திகழ்ந்தார். அதேபோல் மு.க.அழகிரிக்கும் மு.க.ஸ்டாலினுக்குமான மனக்கசப்புகளை அடிக்கடி பேசி தீர்த்து வைத்திருக்கிறார்.
முழு நேர ஓய்வு: ஆற்காட்டாருக்கு இரண்டு மகன்கள் அதில் ஒருவர் மருத்துவர் மற்றொருவர் பொறியாளர். மருத்துவரான கலாநிதி வீராசாமியை அரசியல் வாரிசாக கொண்டு வந்துள்ளார் இவர். வடசென்னை மக்களவை உறுப்பினராக உள்ள கலாநிதி வீராசாமி இப்போது முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.

தற்போது 86 வயதாகும் ஆற்காடு வீராசாமி சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் முழு நேர ஓய்வில் இருந்து வருகிறார். ஏற்கனவே இடுப்பு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர் என்பதாலும், வயது முதிர்வாலும் அவரால் முன்பை போல் நடக்க முடியாத நிலை உள்ளது. புத்தகங்களை வாசிப்பது, பழைய நினைவுகளை அசைபோடுவது என தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் ஆற்காடு வீராசாமி.












Click it and Unblock the Notifications