சுள்ளென்று அடிக்கும் வெயில்..5 நாட்களுக்கு ஜில்லென்று பெய்யப்போகும் மழை..வானிலை கூல் தகவல்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: இன்று முதல் 5 நாட்களுக்கு தென்தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மழை காலத்தில் இயல்பான அளவு மழை பெய்தது. குளிர்காலமும் முன்கூட்டியே தொடங்கி வாட்டி வதைத்தது. அதே போல கோடை காலமும் முன்னதாகவே தொடங்கி விட்டது. இந்த ஆண்டு பல மாநிலங்களில் அனல் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே இயற்கை குளிர்பானங்களை மட்டுமே குடிக்க வேண்டும் எனவும் காற்றோட்டமான அறைகளில் இருக்க வேண்டும் எனவும் பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பங்குனி மாதம் பிறக்க இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் அக்னி நட்சத்திர காலம் போல வெயில் சுட்டெரிக்கிறது. சுடும் வெயிலுக்கு இதமாக வானிலை ஆய்வு மையம் குளிர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 04.03.2023 முதல் 06.03.2023 வரை: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
7 மற்றும் 8ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications