வறண்ட வானிலை..வீசும் அனல் காற்று..வருண பகவான் மனது வைப்பது எப்போ? கோடை மழை பெய்யுமா?
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 12 முதல் 14ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

12 முதல் 14ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.
இன்றும் நாளையும் வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறுவுறுத்தப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
பங்குனி மாதம் பிறந்தாலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து விடும். சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிடும். நடப்பாண்டு வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வருண பகவான் மனது வைத்தால் மட்டுமே கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். எனவே கோடை மழை பெய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications