தமிழகத்தில் சத்தம் இல்லாமல் உயர்த்தப்பட்ட சுங்கசாவடி கட்டணம்.. டிடிவி தினகரன் கடும் கண்டனம்
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென கட்டணங்களை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள நத்தக்கரை, புதூர்பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம், நல்லூர், பாளையம், வைகுந்தம், எலியார்பத்தி, கொடை ரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, விஜயமங்கலம் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளுக்கும் ஏற்ப 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு டுவிட்டரில் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் , "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் எந்தவித வெளிப்படையான அறிவிப்பும் இல்லாமல் திடீரென கட்டணங்களை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது. நடுத்தர மக்களைப் பாதிக்கும் இந்த கட்டண உயர்வை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பராமரிப்பில்லாத சாலைகள் உள்ள பகுதிகளில் கூட அதிகளவில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்கள் மக்களுக்கு பெரும் சுமையாகிவிட்டன.
ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத சுங்கச்சாவடிகளை மூடுவதற்கும், மற்ற இடங்களில் வசூலிக்கும் தொகையைக் கொண்டு முறையாக சாலை பராமரிப்பு மற்றும் வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்கும் மத்திய,மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தினகரன் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications