நேற்று போல் இன்று இல்லை.. குடும்பஸ்தர்களுக்கு ஷாக்! தடதடக்க வைத்த தக்காளி விலை! பட்ஜெட்டில் துண்டு!
சென்னை: மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், எதிர்பார்த்தது போலவே இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில், தக்காளி விலை விண்ணைத் தொட்டுள்ளது. நேற்று தக்காளி விலை 100 ரூபாயை கடந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை ஒரு கிலோ தக்காளி 120 ரூபாயை கடந்துள்ளது.
அக்டோபர் நவம்பர் மாதம் வந்து விட்டாலே இல்லத்தரசிகளுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் எப்போதும் தலைவலி தான். ஒரு பக்கம் மழை காரணமாக உடல்நல பாதிப்புகள் என்று வந்தால், மறுபக்கம் காய்கறி விலை உயர்வு எப்போதும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தென்னை மரங்கள் உள்ளிட்டவை கருகின. மேலும் விவசாயத்திற்கும் போதிய தண்ணீர் கிடைக்காததால் காய்கறிகளின் விலை சற்றே உயர்ந்தது.
தற்போது மழைக் காலம் துவங்கி இருக்கும் நிலையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் திடீர் வெயில் திடீர் மழை என மாறி மாறி வந்த காலநிலை காரணமாக தக்காளி விளைச்சலில் பெறும் மாற்றம் இருந்தது. தக்காளி காய்கள் பழுக்காமல் செடியிலேயே வெம்பி விட்டதால், காய்கறி சந்தைகளுக்கு வரத்து வெகுவாக குறைந்தது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில் இருந்து ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் மூலம் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது மழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் விலை அதிகரித்து வந்தது. கடந்த மாதம் வெறும் 40 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த தக்காளி, கடந்த ஒரு வாரமாகவே விலை உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெறும் 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாயை தாண்டி உள்ளது.
தற்போதைய சூழலில் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதனை வாங்கிச் சென்று வெளியில் சில்லறை விலையில் விற்கும் சிறு வியாபாரிகள் கூடுதல் லாபம் வைத்து 110 முதல் 120 ரூபாய் வரை விற்கின்றனர். இதனால் இல்லத்தரசிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையும் சிறிது சிறிதாக உயர்ந்து வருவதால் பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் உணவில் தக்காளியின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள ஆரம்பித்ததாக கூறுகின்றனர் இல்லத்தரசிகள். தற்போது வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து ஒரு நிலையில் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து அங்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு வரும் தக்காளியின் அளவு குறைந்திருக்கிறது.
தினசரி 60க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி வரும் நிலையில் தற்போது 35 முதல் 40 லாரிகளாக குறைந்துள்ளது. மேலும் வரும் காலங்களில் இதே நிலைதான் நீடிக்கும் 150 ரூபாய் வரை கூட தக்காளி விற்பனையாகலாம் என்கின்றனர் வியாபாரிகள். அதே நேரத்தில் விவசாயிகளிடம் குறைந்த விலையிலேயே தக்காளி கொள்முதல் செய்யப்படும் நிலையில், இடைத் தரகர்கள் தலையீடு, வியாபாரிகள் கமிஷன், டோல்கேட், போக்குவரத்து செலவு, ஆட்கூலி, லேபர் உள்ளிட்டவை காரணமாகவே விலை உயர்வு என்கின்றனர் விவசாயிகள்..












Click it and Unblock the Notifications