சென்னையில் தக்காளி விலை ‘தாறுமாறு’ உயர்வு.. கனமழைக்கு மத்தியில் காய்கறி வாங்கும் பொதுமக்கள் அவதி
சென்னை: தொடர் கனமழை காரணமாக வரத்து குறைந்து சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ரூ.70 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை தாக்கம் காரணமாக தோட்ட பயிர்களான தக்காளி, கேரட் உள்ளிட்டவற்றின் வரத்து காய்கறி சந்தைகளுக்கு வெகுவாக குறைந்தது.

அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்று கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக தக்காளி விலை குறைந்தே இருந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டு வந்தது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் இதன் விலை ரூ.15 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் தான் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததாகவும், அதனால் கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்த தக்காளி விலை திடீரென்று எகிறியதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூபாய் 25 வரை நேற்று ஒரே நாளில் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.50 வரை தக்காளி விற்பனை ஆனது. இதை விட கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை வெளி மார்க்கெட், சில்லறை கடைகளில் விற்பனை ஆகிறது. தக்காளி விலை உயர்வால் காய்கறி வாங்கும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதேபோல், கடந்த 2 நாட்கள் முன்பு வரை ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையான பீன்ஸ், நேற்று விறுவிறுவென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.75 முதல் ரூ.90 வரை விற்றது. வரத்து குறைவால் பீன்ஸ், கேரட், அவரை, முருங்கைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் அதிகரித்து உள்ளது.












Click it and Unblock the Notifications