அண்ணாசாலையில் நாளை ஹெவி டிராஃபிக்கிற்கு வாய்ப்பு.. வாகன ஓட்டிகளுக்கு சென்னை டிராஃபிக் போலீஸ் அலர்ட்
சென்னை: சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நாளை நடைபெறும் "தாமரை மாநாடு" பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அண்ணாசாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த மாதம் 27, மற்றும் 28 ஆம் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலையின் நடைபயணம் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மறுநாள் தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை தருகிறார். நாளை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன்பிறகு சென்னை ஒய் எம்.சிஏ நந்தனத்தில் நடைபெறும் தாமரை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
பாஜக தொண்டர்களும் குவிவார்கள் என்பதால் சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை சார்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் 04. 03. 2024 அன்று மாலை 5 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறும் "தாமரை மாநாடு" பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் இடம் மற்றும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை. ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் தடை செய்யப்படும்.
* மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை
* இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை
* மவுண்ட் பூன்னமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை.
* அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு
* விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி)
* அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை
தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை. எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications