நச நசன்னு விடாத மழை.. சாலைகளில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்.. சென்னையில் டிராபிக் ஜாம்
சென்னை: தொடர்மழை காரணமாக சென்னையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம் வள்ளுவர் கோட்டம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்னமும் தீவிரமடையவில்லை. தீபாவளி பண்டிகைக்கு மறுநாளில் இருந்து 2 நாட்கள் மழை பெய்தது. பின்னர் சற்றே ஓய்வெடுத்தது. நேற்று முதல் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் மேக மூட்டத்தோடு காணப்பட்டது. இரவில் இடி மின்னலோடு பல பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

இன்று அதிகாலை முதலே பல பகுதிகளிலும் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சாரல் மழை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. மழையில் நனைந்து கொண்டே மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.
சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, தி நகர், எழும்பூர், போன்ற பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பள்ளமான சாலைகளில் வெள்ளமாக தேங்கியுள்ள மழை நீரினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்தனர்.
சென்னையில் எந்த சாலைகளிலும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். புகார் தெரிவித்த பகுதிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கனமழையாக பெய்து விட்டு ஓயாமல் நச நசவென சாரல் மழை பெய்து சங்கடத்திற்கு ஆளாக்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சாரல் மழையால் சென்னையின் பிரதான சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. அண்ணாசாலை, வள்ளுவர் கோட்டம், ஜெமினி பாலம் பகுதிகளில் வாகனங்கள் சில கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை கட்டி நிற்கின்றன.
பள்ளிகளுக்கு விடுமுறைக்கு அறிவிக்கப்படாத காரணத்தால் மாலை நேரங்களில் வாகனப்போக்குவரத்து அதிகரிக்கும் போது போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications