தீபாவளி பர்சேசிங்.. தி.நகர் போறீங்களா? இனி பார்க்கிங் பிரச்சனை கிடையாது! மாஸ் ஐடியா பண்ண மாநகராட்சி
சென்னை: தீபாவளியையொட்டி துணி, நகை எடுக்க பலரும் தி.நகருக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த நாட்களில் பார்க்கிங் பிரச்சனை பெரும் தலைவலியாக இருக்கும். இந்நிலையில், தி.நகர் மேம்பாலத்தை பார்க்கிங் ஏரியாவாக மாற்றி இந்த பிரச்னைக்கு சென்னை மாநகராட்சி தீர்வு கண்டிருக்கிறது.
வழக்கமாக ஒவ்வொரு பண்டிகை நாட்களுக்கும் தி.நகரில் மக்கள் கூட்டம் அலை மோதும். அப்பா அம்மாவை தவிர இங்கு எல்லாமே கிடைக்கும் என்று கூறும் மக்கள், விழா நாட்களில் தி.நருக்கு படையெடுப்பதை ஒரு சடங்காகவே செய்து வருகிறார்கள். அதிலும் தீபாவளி என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டியதில்லை. சென்னை முழுவதுமே.. தி.நகரில் உள்ள 4 தெருக்களில்தான அடைந்து கிடக்கும்.

மக்கள் கூட்டம் ஒருபுறம் எனில், அதற்கு போட்டி போட்டு வாகனங்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும். பெண்கள் கடைகளில் புடவைகளை தேடினால்.. நம்ம பசங்க பார்க்கிங்குக்கு இடத்தை தேடிக்கொண்டிருப்பார்கள். இப்படியாகவே தீபாவளி பொழுது கழிந்துவிடுகிறது. இதற்கு நல்ல தீர்வு பொது போக்குவரத்தை பயன்படுத்துவதுதான். ஆனாலும், அன்னைக்குனு பார்த்து எல்லா பஸ்ஸும் செம கூட்டமா இருக்கும். எனவே வேறு வழியின்றி மக்கள் பைக், கார்களை நாடுகின்றனர்.
இதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு சென்னை மாநகராட்சி இந்த முறை அட்டகாசமான தீர்வை கண்டுபிடித்திருக்கிறது. அதாவது, தெற்கு உஸ்மான் ரோடுக்கும் - சிஐடி நகர் முதல் மெயின் ரோட்டுக்கும் இடையே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. எனவே, உஸ்மான் ரோடு மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாலத்தை பார்க்கிங்காக பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. சுமார் 800 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் 1500 பைக்குகள், 100 கார்கள் வரை நிறுத்த முடியும். ஷாப்பிங் வரகிறவர்களுக்கு இது போதுமே!
பாலத்தின் மீது பார்க்கிங் போட்டுவிட்டால், பாதசாரிகளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அதேபோல போக்குவரத்து காவலர்களுக்கும் டிராபிக்கை சரி செய்யும் பணி மிச்சம். இந்த பார்க்கிங்குக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என சொல்லப்படுகிறது. தி.நகரில் தீபாவளியன்று டிராபிக் இல்லையெனில்.. அன்னைக்குதான் உண்மையான தீபாவளியே என மக்கள் இந்த அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தெற்கு உஸ்மான் ரோடுக்கும் - சிஐடி நகர் முதல் மெயின் ரோட்டுக்கும் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பாலம், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், கட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக, பாலம் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
எது எப்படியோ நமக்கு பார்க்கிங் கிடைச்சா ஓகேதான்!












Click it and Unblock the Notifications