ரயில் பயணிகளின் கவனத்துக்கு.. இனி வாட்ஸ்அப்பிலேயே உணவு ஆர்டர் செய்யலாம்.. எப்படி தெரியுமா?
ரயில் பயணத்தின்போது வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர் செய்யும் வசதி சில வழித்தடங்களில் மட்டுமே உள்ளது. இதனை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை: ரயில் பயணத்தின்போது வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர் செய்யும் வசதி சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ள நிலையில் இதனை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் எந்த தனி செயலி, இணையதளம் செல்லாமல் நேரடியாக வாட்ஸ்அப்பில் இருந்து உணவு ஆர்டர் செய்து பெற முடியும்.
இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்துகளில் ஒன்று ரயில். ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
டிக்கெட் முன்பதிவு செய்தால் செல்ல வேண்டிய இடத்துக்கு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் பயணிக்க முடியும் என்பதால் இன்னும் கூட ரயில் பயணத்தின் மீதான மவுசு குறையவில்லை.

50 ஆயிரம் பேர் பயன்
இவ்வாறு பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்( ஐஆர்சிடிசி) உணவுகளை தயார் செய்து வழங்கி வருகிறது. இதற்காக தனி இணையதளம் மற்றும் செல்போன் செயலி உள்ளது. இதன்படி தினமும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான உணவுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க வாட்ஸ்அப் மூலம் பயணிகள் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்ய முடிவு செய்தது.

வாட்ஸ்அப்பில் உணவு
இந்த திட்டத்தை 2 கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக சில குறிப்பிட்ட வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் மட்டும் வாட்ஸ்அப்பில் உணவு ஆர்டர் செய்து பெறும் வசதி உள்ளது. அதன்படி 8750001323 என்ற எண் மூலம் பிஎன்ஆர் எண்ணை பதிவிட்டு வாட்ஸ்அப் மூலமாக உணவை ஆர்டர் செய்து இருந்த இடத்தில் இருந்தே பெற்று கொள்ள முடியும்.

சாட்போட் பயன்பாடு
இதன்மூலம் எந்த தனி செயலியையும் பதிவிறக்கம் செய்யாமல் வாட்ஸ்அப் மூலம் உணவை பெற்று கொள்ள முடியும். அதோடு ஆர்டர், உணவு சேவை தொடர்பான கருத்துகளையும் மக்கள் பதிவிட்டு கொள்ளலாம். இதற்காக இ-கேட்டரிங் மற்றும் உணவு முன்பதிவு குறித்த பயணிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட சாட்போட் பயன்படுத்தப்படுகிறது.

விரிவுப்படுத்த திட்டம்
தற்போது இந்த சேவையை அனைத்து வழித்தடங்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இது தொடர்பாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛தேர்ந்தெடுக்கப்பட்ட சில இ-கேட்டரிங் சேவைகளுக்கான வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் பிற ரயில்களில் இது அமல்படுத்ததப்பட உள்ளது' என கூறப்பட்டு உள்ளது. இதன்மூலம் விரைவில் அனைத்து வழித்தடங்களிலும் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications