குமரியில் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்களால் பரிதவித்த பயணிகள்.. பஸ்களில் அனுப்பி வைப்பு! என்ன நடந்தது?
சென்னை: நாகர்கோவில் முதல் குமரி வரையிலான வழித்தடத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை 4 ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. விவேக் எக்ஸ்பிர, குருதேவ் எக்ஸ்பிரஸ் உள்பட 4 ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் பஸ்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் சென்னை முதல் நெல்லை வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டது. தற்போது குமரி நாகர்கோவில் இடையேயும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

பாலங்கள் அமைக்கும் பணி
இந்த ரயில் வழித்தடத்தில் சிறிய பாலங்கள் மற்றும் இடையிடையே மடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக தண்டவாளங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் விவசாய குளங்கள் இருப்பதால், அந்த குளத்தில் இருந்து மறுபுறம் தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக கான்கிரீட் பாலங்கள் தண்டவாளத்திற்கு கீழாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் பகல் நேரங்களில் இல்லாமல் இரவு நேரங்களில் மட்டும் நடந்து வருகிறது.
கடந்த இரு மாதங்களாக இந்த பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள குளத்தில் இருந்து மறுபுறம் தண்ணீர் செல்ல வசதியாக தண்டவாளத்தை மாற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைக்க ரயில்வே ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த பணியானது இரவு 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அந்த இடத்தில் இருந்த தண்டவாளங்கள் கிரைன் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டன.
பாதியில் நிறுத்தப்பட்டன
நேற்று முன் தினம் இரவு தொடங்கிய இந்த பணியானது காலை 5 மணி வரை நடந்தது. இந்த நேரத்தில் ரயில் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அந்த வழியாக நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு பிறகு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. தீப்ருகரில் இருந்து குமரிக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரயிலில் இருந்து பயணிகள் அவதியடைந்தனர்.
அங்கிருந்து பயணிகள் பஸ் மூலமாக நாகர்கோவில் மற்றும் குமரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதே போன்று, சாலிமர் டூ குமரி வந்த குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயில் இரணியல் ரயில் நிலையத்தோடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதில் இருந்த பயணிகள் பஸ் மூலமாக நாகர்கோவில் மற்றும் குமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 5 ரயில்கள் இப்படி ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பயணிகள் அவதி
இதன் காரணமாக மற்ற ரயில்களும் தாமதமாக நாகர்கோவில் வந்தடைந்தன.. கோவை டூ நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ½ மணி நேரம் தாமதமாக அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதேபோன்று, குமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் 45 நிமிடம் தாமதமாக வந்தது. வழக்கமாக அதிகாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடையும். ஆனால் நேற்று தாமதமாக வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் பரிதவித்தனர்.












Click it and Unblock the Notifications