ஜெ. ராதாகிருஷ்ணன் திடீர் மாற்றம் ஏன்.. அமைச்சருடன் ஏற்பட்ட மோதல் காரணமா?
சென்னை: 2012 முதல் தமிழக சுகாதாரத் துறையின் செயலாளாராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். இப்போது பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதோடு இவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு தேர்தல் காரணமாக கூறப்படுகிறது ஆனால் முதுநிலை அதிகாரியான ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை தீர்க்க முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று கூறினார் அதோடு ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதியாகிவிட்டதால், சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது ராதாகிருஷ்ணன் உட்பட ஐ எ.எஸ் அதிகாரிகள் தரப்பை கொதிப்படையச் செய்தது. அமைச்சர் சி வி சண்முகத்தின் கருத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் வரவேற்று பேசியிருந்தார். தொடர்ந்து ஐ.எ.எஸ்.அதிகாரிகள் சங்கம் அமைச்சர்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் ராதாகிருஷ்ணனின் பின்னணியில் தினகரன் இருப்பதாக குற்றம் சாட்டினர். இதற்கும் கண்டனம் தெரிவித்த அதிகாரிகள் சங்கம் அமைச்சர்களை முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என கூறினார்.
இப்படியாக வளர்ந்து கொண்டிருந்த சண்டை ஒரு கட்டத்தில் ஓய்ந்தது. அதற்கு முன்னதாக சசிகலாதான் குற்றவாளி என்ற நோக்கிலேயே விசாரணை ஆணையத்தின் போக்கை மாற்ற ஆளும் தரப்பு எண்ணியதாகவும் அதற்கேற்றவாறு ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல சசிகலாதான் அனுமதிக்கவில்லை என்று ராதாகிருஷ்ணன் கூற வேண்டும் என்று ஆளும் தரப்பு எண்ணியதாகவும் அதற்கு ராதாகிருஷ்ணன் ஒத்த்துக்கொள்ளவில்லை என்பதாலேயே இப்படி ஒரு சர்ச்சை ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியாக சர்ச்சை ஆரம்பித்த பொழுதில் இருந்தே ராதாகிருஷ்ணனை சுகாதாரத்துறையில் இருந்து மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராதாகிருஷ்ணனும் தன்னை சுகாதாரத்துறையில் இருந்து மாற்றுமாறு கோரியதாகவும் கூறப்படுகிறது.
இரு தரப்பிலும் இருந்து வந்த அழுத்தத்திற்கு இப்போது மாற்றம் செய்தால் அது இந்த சர்ச்சையினால்தான் மாற்றம் நிகழ்ந்தது என்று மீண்டும் ஒரு சர்ச்சை எழும் என்பதால் சிறிது காலம் தாழ்த்தி இப்போது மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.