பெரியாரும் பிரபாகரனும் எதிர் துருவங்கள் அல்ல- சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!
சென்னை: தந்தை பெரியாரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் எதிர் எதிர் துருவங்கள் அல்ல; இருவரையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கப்படும் பொய்விம்பத்தை வன்மையாகக் கண்டிக்கிறது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கைவிடுவதாக அறிவுத்தனர். இதனையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச அரசியல் போராட்டங்களுக்காக 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலைப் புலிகளின் தலைமையால் நார்வே முன்னெடுப்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தமது பிரதிநிதியாக அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டு பங்கேற்றவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன்.

இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு இந்தியா அங்கீகாரம் தரவில்லை. தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரையும் பிரபாகரனையும் இரு துருவங்களாக முன்னிறுத்தி பேசுவதைத் தொடர்ந்து இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சீமானைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தந்தை பெரியாரையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கப்படும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பிரபாகரன், தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியற் சூழலைக் கடந்து, ஒட்டு மொத்தத் தமிழ்நாடு மக்களும் அரசியற் கட்சிகளும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்.
நமது விடுதலை இயக்கத்துக்கு கடினமான நேரங்களில் உறுதுணையாக நின்றவர்களுக்கு என்றும் மரியாதையுடன் மதிப்பளித்து வந்தவர்.
தமிழ் உணர்வுடனும் தமிழீழ விடுதலைப் பற்றுடனும் திராவிட இயக்க வழிவந்த தோழர்கள் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பும் பணியும் என்றும் பிரபாகரனதும் தமிழீழ மக்களதும் மனங்களை நெகிழச் செய்தவை.
இத்தகைய நமது சொந்தங்களுக்கு எதிரான தளத்தில் பிரபாகரனை நிறுத்தும் முயற்சியினை சீமான் கைவிட வேண்டும் எனவும் நாம் அவரைக் கோருகிறோம்.
பிரபாகரனால் தனது மாவீரர் நாள் உரைகளிலும் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் செவ்விகளிலும் அவரால் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் மட்டுமே அவரது கருத்துகளாகக் கருதப்படும்.
இவற்றை விட அவர் சார்பில் கருத்துரைக்கவோ அல்லது அவரது கருத்துகளை தமது அரசியற் தேவைக்கேற்ப வளைத்துத் திரித்துப் பயன்படுத்தவோ எவரும் முனையின் அது அரசியல் அறம் அற்ற ஒரு போக்காகும். இத்தகைய அணுகுமுறை, பிரபாகரன் கடைப்பிடித்த அறநெறிக்கு முரணானது ஆகும்.
தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினையும் தமிழ்நாட்டு மக்களின் தேசியப்பிரச்சினையும் வேறுபட்டவை, தனித்துவமானவை.
தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ மக்களே தலைமை தாங்க முடியும் தலைமை தாங்க வேண்டும்.

சிங்களத்தின் தமிழின அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாட்டில் இருந்து கட்சி வேறுபாடு கடந்து பரந்து பட்ட ஆதரவைத் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியற்கட்சித் தலைவர்களும் மேற்கொள்ளக்கூடாது. தந்தை பெரியாரும் பிரபாகரனும் எதிர்த்துருவங்கள் அல்ல. இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications