முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடி.. வினாத்தாள் மாற்றி தரப்பட்டதா? TRB கொடுத்த விளக்கம்!
சென்னை: இன்று நடைபெற்ற முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடி என புகார் எழுந்தது. வணிகவியல் பாடத்திற்கு விண்ணப்பம் செய்த நிலையில் மொழிப்பாடத்திற்கான வினாத்தாள் வழங்கியதாக தேர்வர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,966 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று நடைபெற்றது. இதனை 2.36 லட்சம் தேர்வர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. முதலில் செப்டம்பர் 28-ம் தேதி தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதே நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றதால் தேர்வு தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. முதலில் அறிவிக்கப்பட்ட தேர்வு தேதி மாற்றம், புதிய பாடத்திட்டம் ஆகியவற்றால் தேர்வர்கள் கலக்கத்தில் இருந்தனர்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்விற்கு தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், மேலும் 3 வாரங்களுக்கு தேர்வை ஒத்திவைக்க தேர்வர்கள் கோரிக்கை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியமோ, தேர்வை ஒத்திவைக்க இயலாது எனத் தெரிவித்தது.
தேர்வை ஒத்தி வைக்கக்கோரி மீண்டும் தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதார்கள் தேர்வு எழுத உள்ளதாகவும், தேர்விற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் அக்டோபர் 12 ஆம் தேதி திட்டமிடப்படி தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்தது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்தத் தேர்வில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 பேர் இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்தநிலையில், நெல்லை பாளையங்கோட்டை தேர்வு மையத்தில் முதுநிலை ஆசிரியர் தேர்வில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக குளறுபடி ஏற்பட்டது. வேலூரை சேர்ந்த சினோன் என்பவர் வணிகவியல் பாடத்திற்கு விண்ணப்பம் செய்த நிலையில் மொழிப் பாடத்திற்கான வினாத்தாள் வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
தேர்வர் விண்ணப்பித்த பாடத்தின் அடிப்படையிலேயே அவருக்கு மொழித்தாள் வினாத்தாள் வழங்கப்பட்டது. விண்ணப்பத்தை தவறாக பதிவு செய்தது தேர்வரின் தவறு என வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications