'டிஆர்பி ராஜா' என்னும் நான்.. அமைச்சராக பதவியேற்றார்.. ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சராக உள்ள சா.மு.நாசர் நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்றார்.
ராஜ்பவனில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக பதவியேற்கும் டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக இப்போது தான் அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு அமைச்சரவையில் மாற்றம் மட்டும் செய்யப்பட்டது.

முதல்முறை எப்படி: அதாவது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்கு மாற்றப்பட்டது. அத்துடன் அமைச்சரவையில் புதிதாக உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் அளிக்கப்படடது.
சேகர்பாபு: அத்துடன் கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டது. வீட்டுவசதி துறையில் இருந்த சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு (சென்னை பெருநகர வளர்ச்சி துறை) அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் அளிக்கப்பட்டது.

துறைகள் மாற்றம்: இந்நிலையில் திமுக அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் முடிந்து 3 வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து செய்திகள் தீவிரமாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக பால்வளத்துறையில் எழுந்த சிக்கல் காரணமாக அமைச்சர் சா.மு.நாசர் மாற்றப்படுவார் என்றும் உதயநிதி, சபரீசன் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ காரணமாக பிடிஆரும் துறை மாற்றப்படுவார் என்று தகவல்கள் பரவின,
ராஜ்பவன் அறிவிப்பு: இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த 9-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

பதவியேற்பு: இதையடுத்து ஆளுநர் மாளிகையில் இன்று காலை10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் ரவியுடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். இந்த விழாவில் டிஆர்பி ராஜாவின் தந்தை டிஆர் பாலு மற்றும் குடும்பத்தினர் அனைவரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications