சென்னையின் வடக்கே.. திருப்பதி அருகே லேசான நில அதிர்வு.. மக்கள் பீதி!
சென்னை: சென்னைக்கு வடக்கே திருப்பதி அருகே லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியிலிருந்து 85 கி.மீ. வடகிழக்கில் நள்ளிரவு 1 மணிக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
நில அதிர்வு உணரப்பட்ட பகுதி சென்னைக்கு வடக்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நில அதிர்வால் சேத விவரங்கள் ஏதும் தெரியவில்லை. எனினும் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களின் தூக்கத்தை கெடுத்து அச்சத்தை ஏற்படுத்தியது.
காக்கிநாடா
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி காக்கிநாடா , சென்னை, குண்டூர், திருப்பதி ஆகிய இடங்களில் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. அன்றைய தினம் சுமார் மதியம் 12.35 மணிக்கு சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், திநகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், அம்பத்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
ஆந்திரா பகுதி
சென்னை- ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் 10 கிமீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதால் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது. சென்னையிலிருந்து கிழக்கு- வட கிழக்கு திசையில் சுமார் 320 கிமீ.. தொலைவில் வங்கக் கடலில் நில நடுக்கம் மையம் கொண்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
2019 இலும் நில அதிர்வு
2019 ஆம் ஆண்டும் இது போன்ற நில அதிர்வுகள் உணரப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அது போல் கடந்த ஆண்டு டிசம்பரம் மாதம் வேலூரில் நில அதிர்வு ஏறபட்டது. வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை தும்பேரி கிராமத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவாகியுள்ளது.
வேலூரிலும் 3 முறை
பெங்களூர் அருகே சிக்கபல்லாபுரத்திலும் சித்தூர் அருகேயும் இந்த நில அதிர்வு உணரப்பட்டன. அது போல் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே நில அதிர்வால் வீட்டிலிருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவானது. வேலூர் பேர்ணாம்பட்டில் அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வு உணரப்பட்டது. இதுகுறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.