எடப்பாடி பழனிச்சாமியை பாஜக லேட்டாக புரிஞ்சிகிட்டாங்க.. டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பாஜக மிகவும் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக, பாமக விலகிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவும் விலகிவிட்டது. தற்போது பாஜக நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
நகர்ப்புற தேர்தலில் திமுக தவிர அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் பண மூட்டையோடு அலைகிற கட்சிகள் பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என அலைவார்கள்.

பேரிடர்
ஏற்கெனவே திமுக ஆட்சி வந்தா என்ன நடக்கும் என்று நன்றாகத் தெரியும். அதனால் ஆரம்பித்துவிட்டார்கள், அவர்களுடைய வேலைகளை. இப்போது ஒவ்வொரு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என வார்டு வாரியாக திமுகவை வெற்றி பெற மக்கள் அனுமதித்தார்கள் என்றால் ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள் என்று மக்கள் அவர்களை அனுமதித்தார்கள் என்றால் இது மிகப் பெரிய பேரிடரில்தான் முடியும்.

சொத்துகள்
இதை உணர்ந்து இந்த தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களுக்காக உழைக்கக் கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பொதுமக்களின் சொத்துகள், அரசின் சொத்துகளை சுரண்டாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக வாக்களிக்காமல் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்கள் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

கட்சிகள்
அமமுக சார்பில் நிச்சயமாக நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்துதான் இந்தத் தேர்தலில் போட்டியிட செய்கிறோம். எனவே அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி குறித்து மிகவும் தாமதமாக புரிந்து கொண்டுள்ளனர். இவர்கள் முன்பே சரியாக இருந்திருந்தால் ஒரு முறைகேடான ஆட்சியை தடுத்திருக்கலாம்.

அண்ணா
காமராஜர், அண்ணா காலத்திலிருந்தே தமிழகத்திற்கு ஒரு தனி இடம் இருந்து வருகிறது. ராகுல் காந்தி தன்னை தமிழர் என கூறியதை வரவேற்கிறேன். ஆனால், இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தவர்களே காங்கிரஸ், திமுகதான். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் கையெழுத்து நீட் தேர்வை இல்லாமல் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். அதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications